நிலம், குடிமனை, வீடு கோரி விவசாயத் தொழிலாளர் சிறப்பு மாநாடு எம். சின்னத்துரை எம்எல்ஏ
கும்பகோணம், ஜுன் 9- விவசாய தொழிலாளர்களுக்கு நிலம், குடிமனை, குடிமனை பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தஞ்சை மாவட்ட சிறப்பு மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. சிறப்பு மாநாட்டிற்கு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தார். முன்னதாக திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர்கள் நாகமுத்து, ரங்கசாமி, சாமிகண்ணு, சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை மாநிலச் செயலாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார் மாநாட்டை வாழ்த்தி சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்ககிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் பிரதீப்ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவருமான எம். சின்னதுரை சிறப்புரையாற்றினார். குடந்தை ஒன்றியச் செயலாளர் ஜெ.செந்தில்குமார் நன்றி தெரிவித்தார். மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும், கேரளாவைப் போல முறையான நில சீர்திருத்தம் செய்து, நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கிட வேண்டும். லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் ஆற்றங்கரையிலும், குளக்கரையிலும் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆட்சேபனைக்குரிய நிலங்களை வகை மாற்றம் செய்து குடிமனையும், பட்டாவையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் முன்னதாக, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தொழிலாளர்கள், கும்பகோணம் பாலக்கரையிலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கோரிக்கை முழக்கமிட்டு பேரணியாக வந்தனர்.