tamilnadu

img

உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

உயர்கல்வி வழிகாட்டல்  கட்டுப்பாட்டு அறை திறப்பு

பெரம்பலூர். ஜுன் 9-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை, சார் ஆட்சியர் சு.கோகுல் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் நூறு சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவ படிப்புகள், பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் பெறுவதாவற்கும், பெற்றோர் இல்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில நிதி உதவி கேட்பது தொடர்பாக நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கேட்பதற்காக உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இக்கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி 88072 62766 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தகவல் பெற்று பயன் பெறலாம். இந்த உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு மையம் மூலமாக பெற்றோர் இல்லாத மாணவர்களான அய்யனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா, வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த அகிலன் ஆகியாருக்கு, கட்டுப்பாட்டு அறை மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கோவிந்தராஜபட்டனம் கிராமத்தை சேர்ந்த நந்தக்குமார் என்ற மாணவன் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சேர்க்கை செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில உதவி மற்றும் ஆலோசனைகள் பெற, மாவட்ட உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ம.செல்வக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் கி.ஜெய்சங்கர், உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மகாதேவன் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புலிகள் காப்பக பகுதியில்  மரங்கள் வெட்டி கடத்தப்படவில்லை வனக்கோட்ட துணை இயக்குநர் மறுப்பு

திருநெல்வேலி,  ஜூன் 9- புலிகள் காப்பக பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்த நிலையில் அதற்கு அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குநர் இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புலிகள் காப்பக முண்டந்துறை வனச்சரகத்தில் வாளையார் என்ற இடத்தில் வேட்டை தடுப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு செல்லும் மண் சாலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கன மழையினால் மண் சரிவு ஏற்பட்டு மரம் சாலையில் விழுந்தது. இதனால் வேட்டை தடுப்பு முகாமிற்கு செல்வது தடைபட்ட நிலையில் ஞாயிறன்று முண்டந்துறை வனச்சரகர் முன்னிலையில் வனப்பணியாளர்கள் சாலையில் சாய்ந்த மரத்தினை அகற்றி சாலையின் ஓரத்தில் வைத்தனர். கடத்தல் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஜூலை 4 இல்  ஓய்வூதியர்  குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், ஜுன் 9-  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், ஜூலை 4 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்ப்பு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.    இக்கூட்டத்தில், திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்து கொள்கிறார். அது சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளையும், ஆலோசனைகளையும், நேரில் தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விபரங்கள் பெறலாம். இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளை தெரிவிக்க  விரும்பும் ஓய்வூதியர்கள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விபரம், செல்லிடைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டு 23.06.2025 திங்கள் கிழமைக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தவறாது இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

ராதாபுரம் கால்வாயில்  தண்ணீர் திறக்க ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி, ஜூன் 9- நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் - .ராதாபுரம் வட்டம் ஆவரைகுளம் பொதுமக்கள் மற்றும் ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர்’ போதிலும் கால்வாயில் திறக்கப்பட்ட ராதாபுரம் தண்ணீர் திறக்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 79 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாக கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். ஆனால் அது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள விவசாய நிலம்.தற்போது பாசனம் பெறும் இடம் 16 ஆயிரம் ஏக்கர் நெல்  சாகுபடி நிலம், 10 ஆயிரம் ஏக்கர் வாழை சாகுபடி நிலம், 20 ஆயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி நிலம் என உள்ளது.  இவை அனைத்திற்கும் தண்ணீர் பாய்வதற்கு இடம் இல்லாமல் தண்ணீர் கடலில் பாய்கிறது. எனவே ராதாபுரம் கால்வாயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீணாக கடலில் விடப்படும் தண்ணீரை மட்டும் விட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

திருச்செந்தூரில்  வைகாசி விசாகத் திருவிழா: பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி, ஜுன் 9-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்ததால் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. 
பக்தர்கள் காவடி மற்றும் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக கூடுதலான சிறப்பு பேருந்துகள், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண் தலைமையிலான காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். 
விழாவிற்கான ஏற்பாடுகளை  திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன்  மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

தஞ்சாவூர், ஜுன் 9-  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தொழில் நுட்பப் பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐடிஇஸ் (ITES) மற்றும் பிபிஓ (BPO) பயிற்சி, யுஐ (UI) / யுஎக்ஸ் (UX) இணைய தொழில் நுட்பப் பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

பால் பொருட்களின் விநியோகப் பிரச்னைகள்  ஓரிரு மாதங்களில் சரியாகும் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி 

புதுக்கோட்டை, ஜுன் 9-  ஆவின் தயாரிக்கும் பால் உற்பத்திப் பொருட்களை அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யும் முறையில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. ஓரிரு மாதங்களில் அவை முழுமையாக சரியாகும் என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவின் குளிர்பதனக் கிடங்கை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு அவர் கூறுகையில், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு, ரூ.3 மானியம், தரமான பாலுக்கு மேலும் ஒரு ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. லாபகரமாக செயல்படும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு போனஸ் போன்ற பல்வேறு வகைகளில் மொத்தம் ரூ.10 வரை கூடுதலாக வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் ஆண்டுதோறும் சீரான விலை என்பது கிடையாது. சீசனுக்கு மட்டும் நல்ல விலை கொடுப்பார்கள். பிறகு கொடுக்க மாட்டார்கள். ஆனால், ஆவின் நிறுவனத்தில் மட்டும்தான் ஆண்டுதோறும் சீரான விலை தரப்படுகிறது. ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்ஸி வழியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சில பணிகளுக்கு தற்காலிகப் பணியிடங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாது. மக்களிடம் ஆவின் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான வர்த்தக ரீதியான பணிகளுக்கு தற்போது கூடுதலாக பணியாளர்களை நியமிக்கப் போகிறோம்.  கடந்த ஓராண்டில் ரூபாய் ஆயிரம் கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.80 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.40 கோடி வரை வட்டியில்லாக் கடன்களாகும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, கடன் வழங்குவதை ஒரு மடங்கு உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவுச் சங்கங்களை லாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றுவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய உற்பத்தியைப் பொருத்தவரை, கொள்முதல் அதிகரிக்கும்போது அதற்கேற்ப புதிய வாய்ப்புகளையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான பணப் பட்டுவாடா 10 நாட்களுக்குள் வழங்குகிறோம். கடந்த காலங்களில் இது முறையாக நடக்கவில்லை. அதேபோல, தனியார் நிறுவனங்களிலும் பணப் பட்டுவாடா சரியாக இல்லை. விவசாயிகள் நம்ப வேண்டும். பாலின் விலையைக் கூட்டாமலேயே 4 சதவிகிதம் புரதச் சத்து உயர்த்தப்பட்டுள்ளது. பால் தவிர்த்து 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்களை எல்லாக் கடைகளுக்கும் விற்பனைக்கு அனுப்புவதில் விநியோகப் பிரச்னை இருந்தது. அதனை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டள்ளன. ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றார்.