கோட்டை கனவில் கணக்கில் கோட்டை விட்ட கவர்னர் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
தமிழ்நாட்டின் பட்டியல் இனத்தவர் கல்வி விகிதம் பற்றிய உண்மைக்கு மாறான தகவல்களுடன் தமிழ்நாடு கவர்னர் பேசியுள்ளதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விமர்சிக்கிறது. பட்டியலின மக்களை ஏமாற்றத் துடிக்கும் கவர்னரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உரியது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, "தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் மொத்த நுழைவு விகிதம் (GER) 51 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய சராசரியான 28 சதவீதத்தை விட அதிகம் ஆகும். ஆனால் பட்டியல் சாதியினர் மத்தியில் இது 13 அல்லது 14 சதவீதமாகவே உள்ளது. இது தேச சராசரியில் பாதிதான்... நாம் சமூக நீதி பற்றி பேசுகிறோம். நாம் வளர்ச்சி மாடல் பற்றி பேசுகிறோம். எல்லாம் வெறும் கூச்சல்தான்." என்று பேசியுள்ளார்.
உண்மையிலேயே கவர்னருக்கு அக்கறை இருக்குமேயானால் சமூக நீதியைப் பேசாத வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பார். இது சமூக நீதி கருத்தாக்கத்திற்கு அவர் வைக்கும் குறி. அரசியல் விளையாட்டுக்கு அவர் போடும் அச்சாரம். அவ்வளவுதான். ஆனால் அவர் அவசரத்தில் கணக்கில் கோட்டை விட்டு விட்டார்.
முதல் கோட்டை, இந்த 51 சதவீதம், 28 சதவீதம் என்கிற மொத்த நுழைவு விகிதம் (GER) பள்ளிக் கல்வி குறித்ததல்ல. அது 2019 - 20 உயர் கல்வி குறித்த ஆய்வின் புள்ளி விவரங்கள். அதில் தமிழ்நாடு விகிதம் 51.4 சதவீதம். தேசிய அளவு 27.1 சதவீதம்.
இரண்டாவது கோட்டை, தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மத்தியில் உயர் கல்வி விகிதம் (GER) 13 அல்லது 14 சதவீதம் அல்ல. அது 39.6 சதவீதம். அதற்கான தேசிய சராசரி 23.4 சதவீதம். தமிழகம் அதிலும் தேசிய சராசரியை விட அதிகம்தான்.
யாருக்காகவோ கோட்டையில் கண் வைத்தால், இப்படி கோட்டை விடுவது இயல்புதான். அரசியல் கணக்கு தப்பாக இருந்தால் இப்படி கூட்டல் கழித்தல்களும் தப்பாகத்தான் வரும் கவர்னர் அவர்களே!
கல்வியில் "சாதிய இடைவெளி" இருப்பது உண்மை. ஆனால் அதற்காக கவர்னர் கண்களில் இருந்து வழிகிற "கண்ணீரில்" உண்மை இல்லை. உண்மை உள்ளத்தில் இருந்தால் அவர் என்ன பேசியிருக்க வேண்டும்?
சமூக நீதி பேசும் மண்ணிலும் சனாதனம் இன்னும் அலைக் கழிக்கிறது என்றல்லவா பேச வேண்டும்! சமூக நீதியைப் பேசாத மாநிலங்களில் சனாதனம் எப்படி இன்னும் மோசமாக, குரூரமாக ஆட்டம் போடுகிறது என்பதையும் சேர்த்து அல்லவா சொல்ல வேண்டும்! இதற்கு தீர்வு, நிலவுடைமை உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் தேவைப்படும் மாற்றங்கள் என்பதை அல்லவா சொல்ல வேண்டும்!
ஆனால் கவர்னர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
ஏற முடியவில்லை என்றால் ஏணியை சரி செய்யலாம். ஆனால் பரிதாபப்படுவது போல ஏணியைத் தட்டி விடும் சூட்சுமம் இது. ஏமாறமாட்டார்கள் போலி முகங்களை காலமெல்லாம் பார்த்துப் பழகிய பட்டியல் சாதி மக்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.