tamilnadu

img

மீன் பிடி தடை காலம் அமல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதியில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடை காலமாக அமல்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும், இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலில் மீனவர்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனையொட்டி, சென்னை காசிமேடு துறை முகத்தில் இருந்து ஆயிரத்து 200 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 543 விசைப்படகுகளும், கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து இயங்கும் விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும் இந்த மீன்பிடி தடைக்காலம்  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி, காரைக்கால், புதுச்சேரியில் இருந்து 2 ஆயிரத்து 348 படகுகளில் மீன்பிடிக்க செல்லும் சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

வரும் ஜுன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் என்பதால் மீனவர்களுக்கு  வழங்கப்படும் தடைகால நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.