tamilnadu

img

பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்

பாஜகவின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் வி.ஏ.டி.கலியவரதன். அந்த மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகிப்பவர் காயத்திரி. இவர் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில் கலியவரதன் காயத்திரியிடம் பலமுறை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  காயத்திரி, பாஜக மாநில தலைமையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், மாநில தலைமை கண்டுகொள்ளவில்லை.  இதைத்தொடர்ந்து  கலியவரதன் மீது  பாலியல் புகார், பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பாஜக தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

அந்த கடிதத்தில்,  “நான் விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளராக உள்ளேன். மாவட்டத் தலைவர் வி.ஏ.டி. கலிவரதன், மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கும்போதே ”என்னை கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருகிறேன்” என்று நயவஞ்சகமாக பேசி என்னிடம் சுமார் 15 லட்சம் வாங்கி ஏமாற்றி உள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். என்னை கட்சிப்பணி செய்யவிடாமல் தடுக்கிறார். அதுமட்டுமல்லாது என்னை பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் “உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று கொலை மிரட்டலும் விடுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், பா.ஜ.க மாநில தலைமை பாலியல் புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எழுதியுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

;