tamilnadu

img

சமஸ்கிருதம் கற்ற பாத்திமாவும், அரபி கற்ற சகோதரி லிசியும் - டி ஜே எஸ் ஜார்ஜ்

நம்மிடையே இருந்து வருகின்ற சில பிரபலமான கருத்துக்களை உண்மைகள் மறுக்கின்றன. கேரளாவில்
திரிபுனிதுரா பகுதியில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில், வேதாந்தா துறையில் மூத்த விரிவுரையாளர் ஒருவர்
இருக்கிறார். அவரது பெயர்: பாத்திமா பீவி. பாரம்பரியம் சார்ந்த மனம் ஆச்சரியமையவே செய்யும்.
ஆனாலும் உபநிஷதங்களை தனது ஆய்விற்காக எடுத்துக்கொள்வதிலும், அத்வைத வேதாந்தத்தில் முனைவர்
பட்டம் பெறுவதிலும் அசாதாரணமாக எதுவும் இருப்பதாக பாத்திமாவால் காண முடியவில்லை. காலடியில்
உள்ள கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியாக இருக்கின்ற சகோதரி லிசி, அரபியை தனது சிறப்புப் பாடமாகத்
தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார். பர்தா அணிந்த தன்னுடைய வகுப்பு தோழர்களிடையே கன்னியாஸ்திரி
உடையில் லிசி தனித்து நின்றிருந்தார். மற்றவர்களை விட அரபு மொழியைக் கற்றுக் கொள்வதில் வேகமாக
இருந்த அவர் பிஸ்மில்லாஹி அழைப்பைப் பாடியது கேட்டு அனைவரும் பாராட்டினர். மலபாரில் தான்
பணிபுரிந்த கல்லூரிகளில் சமஸ்கிருத ஆசிரியராக நன்கு அறியப்பட்டவராக பி.பி.கதீஜா இருந்தார்.

பள்ளி ஆசிரியரான அவரது தந்தை மொய்தீன் குட்டி கிளாசிக்கல் மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு அவரை
ஊக்குவித்தார். அவரது குழந்தைகளான அஸ்லம், அஸ்மா, ஆயிஷா ஆகியோர் பாரம்பரிய மதரஸாவில்
படித்து வந்த போதும் சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொண்டனர். இவையனைத்தும் தங்களுடைய
பணியிடங்களில் முற்போக்கு மனதிற்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கும் போது, அறிவொளி மற்றும்
சகிப்புத்தன்மைக்கு நேர்மாறானவற்றை வேறு சில நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. தனது மகன் ரஷீத்
கதகளி கற்றதற்கான விலையை திரூரில் உள்ள முஸ்லீம் ஒருவர் கொடுத்ததாக 1999ஆம் ஆண்டு
செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின. நடனத்திற்கான பரிசு மற்றும் பள்ளியில் இருந்தபோது பல
விருதுகளை ரஷீத் வென்றிருந்தார்.
கதகளி கற்பிக்கும் நிறுவனத்தில் சேர்ந்த ரஷீத் இரண்டு ஆண்டுகளில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
அவரது சொந்த ஊரில் இருந்த பழமைவாத இஸ்லாமியத் தலைவர்கள் அதுகுறித்து ஆட்சேபனைகளை
எழுப்பியதோடு, தனது மகனின் அரங்கேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், அவர் நடத்தி வந்த
ஹோட்டல் வணிகத்தை மூடி விட வேண்டும் என்று சிறுவனின் தந்தையிடம் கூறினார்கள். தனது
ஹோட்டலை இழந்த அந்த தந்தை தள்ளுவண்டியில் வைத்து காய்கறிகளை விற்கத் தொடங்கினார். முற்றிலும்
முரண்பாடாக, அந்தக் குடும்பம் ஹிந்து ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொண்டது. ராமய்யன் என்று
தனது பெயரை ரஷீத் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மறுத்து விட்டதன்
விளைவாக பிரச்சனைகளை ரஷீத் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

2000 ஏப்ரலில் கமலா ஹசன் என்ற பெயருடன் ஹிந்து மதத்தைத் தழுவியபோது ஹசன் மௌல்வி என்ற
இஸ்லாமிய அறிஞரின் பெயர் தலைப்புச் செய்திகளில் வெளியானது. ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு
கமலா சுரையா என்ற பெயருடன் மாறிச் சென்ற புகழ்பெற்ற மலையாள-ஆங்கில எழுத்தாளர் கமலா
தாஸுடன் அவரை உடனடியாக ஒப்பீடுகள் செய்யப்பட்டன, கேரளாவில் சிவசேனாவுடன் நெருங்கிய
தொடர்பு கொண்டிருந்த மௌல்வி, பல இஸ்லாமிய நடைமுறைகள் மீது தனது ஆட்சேபணைகளைப் பதிவு
செய்திருந்தார். ஒரு கட்டத்தில், அவர் பைபிளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகள்
பெந்தேகோஸ்தே மிஷன் நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருந்தார்.

இறுதியில், அவர் ஹிந்து மதத்தைத் தேர்ந்தெடுத்தார். ஹிந்து தத்துவத்தின் உள்ளார்ந்த மதிப்புகளுக்கு
அவரது உணர்வுகள் வழிவிட்ட போது, ராமாயணத்தை தான் படிக்க நேர்ந்தது என்று அவர் கூறினார்.
ராமாயணத்திலிருந்து விவேகானந்தருக்குச் சென்ற அவர் இறுதியாக ஊட்டியில் வசித்து வந்த நித்ய
சைதன்யா எட்டியைத் தொடர்பு கொண்டார், எட்டி ஹிந்து சிந்தனையின் அடியாழத்திற்கு அவரை அழைத்துச்
சென்று, வேதங்களையும் உபநிடதங்களையும் விளக்கினார். ஹிந்து மதத்தை ஏற்றுக் கொள்வது குறித்த தனது
கருத்தை ஒவ்வொரு முறை மௌல்வி தெரிவிக்கும் போதும், ​​அத்தகைய முடிவுகள் ஒருவரின் சொந்த சுயாதீன
எண்ணங்கள், லட்சியங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று எட்டி அவரிடம் கூறுவார். மௌல்வியின்
மதமாற்ற விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்கள் ஹிந்து தர்ம பிரச்சார் சபையின் பெயரிலே
அனுப்பப்பட்ட போது, நிலைமை சில பதட்டங்களை உருவாக்கியது. அந்தப் புதிய ஹிந்துக்கு முழு
பாதுகாப்பை வழங்க சிவசேனா கட்சி முன்வந்தது.
வரலாற்று காரணிகளே இந்தியாவில் பொது விவகாரங்களில் மதத்தை ஒருங்கிணைத்தன. தேசப்பிரிவினை
ரத்தப்போக்குடனான காயத்தைக் கொண்டு வந்து சேர்த்தது, தீராத பிரச்சனைகளுக்கு ஹிந்து-முஸ்லீம்
விரோதம் வழிவகுத்துத் தந்தது. இன்று நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக
சுமார் 19.5 கோடி முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய முஸ்லீம்
சிறுபான்மையின நாடாக இந்தியா இருந்து வருகிறது. வரலாற்றின் சில வளமான மரபுகள் கலந்திருப்பதைக்
குறிப்பதாலேயே, மிகுந்த சகிப்புத்தன்மையுள்ள உலகில் மகிழ்ச்சிக்கான காரணமாக அது இருந்திருக்கும்,

சகிப்புத்தன்மையும், இணைந்து வாழ்வதும் அறிவார்ந்த மனதின் அறிகுறிகளாகக் காணப்பட்ட காலம்.
ராமரை ஒருமுறை ஹிந்துஸ்தானின் இமாம் என்று இக்பால் வர்ணித்திருந்தார், அதன் பொருளை நாம்
புரிந்துகொள்ளும்போது அது ஓர் அழகான சொற்றொடராக இருக்கும். பல முஸ்லீம் கவிஞர்கள் சைதன்யா
மகாபிரபு, பொதுவாக வைணவ புனிதர்களின் பாணியிலும் எழுத தூண்டப்பட்டனர். இன்றும், சபரிமலை
செல்லும் பக்தர்கள் முஸ்லீம் துறவியான வாவர் சாமியின் சன்னதியில் வணங்குகிறார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குகையைக் கண்டுபிடித்த ஆடம் மாலிக் குடும்பத்திற்கு அமர்நாத்
கோயிலிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செல்கிறது,

ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள கோகா மெர்ஹி கோவிலாகவும், மசூதியாகவும் இருக்கிறது.
அகமதாபாத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரானாவில் இருக்கின்ற நபியை கிருஷ்ணரின்
அவதாரம் என்று போதித்து வந்த இமாம்ஷா பாபாவின் சன்னதி ஹிந்து பட்டேல்களால்
பராமரிக்கப்படுகிறது. பரத்பூரில் உள்ள மியோக்கள் அர்ஜுனன், பீமாவிலிருந்து வந்தவர்களாக தங்களைக்
கண்டறிந்து கொள்ளும் முஸ்லீம்கள். இவ்வாறு இந்தியாவை ஒன்றிணைக்கின்ற ஒற்றுமையின் பல

அடையாளங்கள் இருக்கின்றன. இவ்வாறு இருந்து வருகின்ற ஒற்றுமைக்கான சின்னங்களை
ஒற்றுமையின்மை, சகிப்புத்தன்மை, மதவெறி ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பிற சின்னங்களைக்
கொண்டு மாற்றுவதற்கான பல வழிகளும் உள்ளன. தேர்வு நம்முடையதாகவே இருக்கிறது.

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2020/dec/06/fatima-learned-sanskrit-sister-
lizi-took-up-arabic-2232307.html
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

;