tamilnadu

img

அரசு மருத்துவர்களின் சேவையை மதிக்காத மத்திய அரசு: மு.க. ஸ்டாலின் விமர்சனம்...

சென்னை:
அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மத்திய அரசு பொருட் படுத்தவில்லை என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு முதுகலை படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசு இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுப்பு பாரதி, அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என தெரிவித்தார்.இதுகுறித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய நேரம் கேட்டு கோரிக்கை விடுத்தார்.மத்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மத்திய அரசு பொருட் படுத்தவில்லை என தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை படிப்புகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும் தன்னாட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.