அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அவதூறாகவும், அவமரியாதையாகவும் வெறுப்பை உமிழ்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னையில் இன்று சிபிஐ(எம்) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில், மாநிலங்களவையில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, 17-ஆம் தேதியன்று மாநிலங்களவையில் பேசினார். அப்போது, “அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசு கிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களை சாடியிருந்தார். அவரின் இந்த பேச்சு, அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கேலி செய்வது மட்டுமன்றி, டாக்டர் அம்பேத்கரையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. அவரின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமித்ஷாவை கண்டித்தும், அவரை பதவி விலக வலியுறுத்தியும் சென்னை, நேரு பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இன்று சிபிஐ(எம்) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுவாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.