tamilnadu

சென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை, ஜூன் 23- சென்னையில் அக்டோபர் மாதம் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினந்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தத. தற்போது திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கொரோனா பரவல் உச்சமடைவது இரண்டு வாரங்கள் தள்ளிப் போகக் கூடும். அடுத்து வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஜூலை மாத 2 அல்லது 3 வது வாரத்தில்2.75 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இந்த மாதம் இறுதிக்குள் 71 ஆயிரம் பேருக்கும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும். ஜூலை 15ம் தேதியில் சென்னையில் 1.50 லட்சம் பேரும், தமிழகத்தில் 2.76 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூலை மாதம் 3ம் வாரத்திற்குள் 1654 பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. இதேகாலத்தில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 72 பேர் உயிரிழக்கக் கூடும். தொற்று பாதிப்பு கட்டுக்குள் வருவதற்குள் மாநிலம் முழுவதும் கணிசமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியிருப்பார்கள் என்று கணித்துள்ள வல்லுநர் குழு, ஊரடங்கு நீட்டிப்பு, முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமே தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலும் என்கின்றனர்.