கல்லூரி மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதியமான் குப்பத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் மதியரசி (18). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தோழிகள் 2 பேருடன் ஒரே வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி.2 ஆம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) காலை அவரது தோழிகள் 2 பேரும் கல்லூரிக்கு சென்ற நிலையில், மதியரசி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதற்கிடையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மதியரசி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரில், மகள் மதியரசி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதனால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவுக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
விழுப்புரம், மார்ச் 4- விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் காமராஜ், சண்முகம் ஆகியோர் ஜானகிபுரம் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் (43) என்பதும், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனியார் ஆம்னி பேருந்து மூலம் கடத்தி வந்து விழுப்புரம் பாகர்ஷா வீதியை சேர்ந்த அன்வர் அலி (58) என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் அன்வர் அலியையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்த 90 கிலோ எடை கொண்ட 12,480 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1.50லட்சமாகும். தொடர்ந்து, சங்கர், அன்வர் அலி ஆகிய இருவரையும் போலீசார். விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேருந்து நிலையத்தில் வாடகை கட்டாத கடைக்கு சீல்
கடலூர், மார்ச் 4- திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள இரண்டு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 65-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாதந்தோறும் மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் சரிவர வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.3 கோடி வாடகை பாக்கி உள்ளது. இந்த வாடகை பாக்கியை செலுத்த கோரி மாநகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தியும், கடைக்காரர்கள் இதுவரை செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி ஆணையாளர் அனு, வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி உதவி வருவாய் அலுவலர் ரம்யா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள், வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றனர், அப்போது கடைக்காரர்கள் தங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி தெரிவித்தனர். அதன் பேரில் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கிய அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கஞ்சா வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம், மார்ச் 4- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கடந்த மாதம் 2 ஆம் தேதி திண்டிவனம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஐந்து நபர்களை விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து 3 கிலோ 65 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து,மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின்படி, சென்னை, பெரும்பாக்கம் கலைஞர் நகர் சிவக்குமார்,விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு கிராமம் சந்தோஷ் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.