யெச்சூரிக்கு முதலமைச்சர் புகழ் வணக்கம்
சென்னை,செப்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில். “தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்குப் புகழ்வணக்கம்! செவ்வணக்கம்!
மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக் காக ஒப்படைத்துவிட்ட அவரது புகழ் - அவரது மக்கள் தொண்டைப் போல் எப்போதும் போற்றப்படும்!” என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்துக் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
சென்னை,செப்.15- சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், அன்னைத் தமிழில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் குறிக்கோள். நேற்றைய தினம் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்றைய தினம் அந்த கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தமிழிலேயே குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எங்கிருந்து வந்தாலும் அதற்கு தடை இல்லை. எனவே வரும் காலங்களில் அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்
சென்னை,செப்.15- தமிழத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும்.