tamilnadu

img

பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்டான்லூர்து சாமியை விடுதலை செய்திடுக.... மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

சென்னை:
கனிமவளங்களை சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடியதால், பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்டான்லூர்துசாமியை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஸ்டான் லூர்துசாமி தமிழகத்திலும் பின்னர் பெங்களூரில் உள்ள இந்திய சமூக ஐக் நிறுவனத்திலும் பல்லாண்டுகள் மக்களுக்காக பல்வேறு வகைகளில் சேவை செய்து வந்தவர். 
இவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் தங்கி ஜார்க்கண்ட் மாநிலம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகவும், விசாரணைக் கைதிகளாகப் பல்லாண்டு காலம் சிறையில் வாடிவரும் பழங்குடி மக்கள் மற்றும் தலித் மக்கள் விடுதலைக்காகவும் போராடி வருகிறார்.குறிப்பாக மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய பல மாநிலங்களில் பழங்குடி மக்களை வெளியேற்றி கனிம வளங்களை மத்திய அரசின் துணையோடு சூறையாடி வரும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக,  பழங்குடி மக்களை பாதுகாத்து பல்வேறு இயக்கங்களை நடத்தி வருபவர். 

இக்காரணத்திற்காகவே கார்ப்பரேட் முதலாளிகளும் மத்திய அரசும் இவரை பழிவாங்க துடித்து வந்தன. இந்த பின்னணியில் பீமா கோரேகான் வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளதாகவும், இவர் நக்சலைட்களுக்கு துணையாக இருந்தார் என்றும் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.84 வயது முதியவரை  மக்களுக்காக போராடி வந்த ஒரு மனித உரிமைப் போராளியை பொய் குற்றச் சாட்டின் அடிப்படையில் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர் மீது குற்றம் சுமத்த எவ்வித தடயமும் இல்லாத சூழ்நிலையில் பொய்யான காரணங்களை கூறி கைது செய்துள்ள மத்திய அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 
தமிழக மக்கள் மத்திய அரசின் இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக வன்மையான கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.