சென்னை:
மத்திய அரசுக்குத் தன்னிச்சையாகக் கடிதம் எழுதிய துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தாண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என்றும், உயர் சிறப்புத் தகுதியை அளிக்க வேண்டும் என்றும் கோரித் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இடஒதுக்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் வராது என உறுதியளிக்க மத்திய அரசு இன்றுவரை மறுத்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வியைக் காவி மயமாக்கிடச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாக எண்ண வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சூரப்பா விளக்கம்
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அளித்துள்ள விளக் கத்தில், “தனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை.69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் கோரினோம் .உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மற்றபடி இந்த நிர்வாக ரீதியாக எந்த மாற்றமும் செய்யப் படாது. இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளத்துறையின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும் “தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம்: அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை எனவும் தெரிவித் துள்ளார்.