tamilnadu

img

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து.. சங்கங்களின் பதிவாளர் திடீர் உத்தரவு

சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து அனைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த சில நாள்களாக திரைத்துறையைக் கடந்து பொதுத் தளத்திலும் விவாதமாகியிருந்தது. தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் பாதுகாப்பு காரணமாக தேர்தல் நடத்தஅனுமதியளிக்க மறுத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. புதனன்று தேர்தல் நடைபெறும் இடம் எது என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தேர்தல் ரத்து உத்தரவு வெளியாகியுள்ளது.

3173 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப் பட்டதாக 61 பேர் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ரத்து என்ற தகவல் வெளியான நிலையில், “இதில் அரசின் தலையீடு இருக்கிறது. ஐசரி கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தோல்வியடைவது உறுதியாகியுள்ள நிலையில் மீண்டும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி பொறுப்புக்கு வருவது ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்கவில்லை. அதனாலே வெற்றியைத் தடுக்கும் வகையில் குறுக்கு வழியில் தேர்தலை நிறுத்தியுள்ளனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். தேர்தல் நடைபெறுவதும் பாண்டவர் அணி வெற்றி பெறுவதும் 100 சதவீதம் உறுதி” என நாசர் தலைமையிலான பாண்டவர் அணியைச்சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.சில தினங்களுக்கு முன்னதாக விஷால் தரப்புக்கு எதிராக செயல்பட்டுவரும் ராதாரவி,எஸ்.வி.சேகர் போன்றோர் தேர்தல் நடைபெறாது என கருத்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.