1869 - அமெரிக்கப் பொருளாதா ரத்தின் கருப்பு வெள்ளி அல்லது தங்க வளையம் என்ற நிகழ்வு ஏற்பட்டது. விடுதலையடைந்த போது காண்டினெண்டல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நாணயத்தாள்களின் மதிப்பு மிக மோசமாகச் சரிந்திருந்த நிலை யில், 1792இல் நாணயச்சட்டம் இயற்றி டாலரை நாணயமாக அறிவித்த அமெரிக்கா, ஸ்பீஷி என்றழைக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்களை மட்டுமே வெளியிட்டது.
தனியார் வங்கிகள் நாணயத்தாள்களை அச்சிட்டாலும், அது சட்டப்படி ஏற்கத்தக்கவையல்ல என்பதுடன், அந்த வங்கி திவாலாகி, உரிய தங்கத்தைத் தரமுடியாமற்போனால், அந்தத் தாள்களும் செல்லாமற்போய்விடும். அமெரிக்க உள்நாட்டுப் போரின் காலமும்(1861-65), செலவுகளும் கணித்திருந்ததை விட அதிகமாகி, போர்ச் செலவுகளால் கடன்கள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், தங்க மதிப்பு இல்லாத, ஆனால், கேட்கும்போது தங்கமாக மாற்றிக் கொள்ளக்கூடிய டிமாண்ட் நோட் என்பதை அமெரிக்க அரசு வெளியிட்டது. அதுவும் போதாமல், (அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி, வட்டி ஆகியவற்றைத் தவிர மற்றவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய) யுனைட்டட் ஸ்டேட்ஸ் நோட் என்பதை வெளியிட்டது. (தங்கம் அதிகம் கிடைத்துக்கொண்டிருந்த கலிஃபோர்னியா, ஆரகான் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் அரசமைப்புச் சட்டத்தின்படி இவை தங்கள் மாநிலத்தில் செல்லாது என்று அறிவித்தது தனிக்கதை!) முந்தைய வங்கித் தாள்களில் ஒருபுறம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்த நிலையில், இந்த இருவகைத் தாள்களிலும் பின்புறம் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் இவை க்ரீன்பேக்ஸ் என்றழைக்கப்பட்டன.
போர் முடிந்தபின், அனைத்துக் கடன்களையும் (க்ரீன்பேக்ஸ் தங்க மதிப்பில் இல்லாததால் அவையும் கடன்களே!), திருப்பிச் செலுத்தினால்தான், உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மரியாதையாக இருக்கும் என்று, கருவூலத்திலிருந்த தங்கத்தை அமெரிக்க அரசு விற்கத்தொடங்கியது. குடியரசுத் தலைவர் யுலிசிஸ் கிராண்டின் தங்கை கணவரைப் பயன்படுத்தி, ஜேம்ஸ் ஃபிஸ்க், ஜே கூல்ட் என்ற இரு வணிகர்கள், அரசின் விற்பனையால் தங்கம் விலை சரிவது விவசாயிகளுக்கு இழப்பு என்று நம்பச்செய்து, விற்பனையை நிறுத்தி, தங்கக் கணக்கு என்ற பெயரில் ஏராளமான நிதி திரட்டி தங்கத்தின் விலையையும் செயற்கையாக உயர்த்தினர். தாமதமாக விபரமறிந்த கிராண்ட் தங்க விற்பனையை மீண்டும் தொடங்கியதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதே இந்த கருப்பு வெள்ளி. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் திவால், விவசாய விளைபொருட்களின் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி என்று மிகமோசமான பின்விளைவுகளை இந்தத் தங்கச்சதி ஏற்படுத்தினாலும், அவர்களிடம் முதலீடு செய்திருந்தவர்கள் பணத்தை இழந்தாலும், பெரிய வழக்கறிஞர்களைக்கொண்டு ஃபிஸ்க்கும், கூல்டும் தண்டனைபெறாமல் தப்பி, செல்வந்தர்களாகவே வாழ்ந்தனர்!
- அறிவுக்கடல்