tamilnadu

img

கோவை போலீசார் மீது கைதி துப்பாக்கிச் சூடு!

கோவை கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி  திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தில், கடந்த மாதம் 12-ஆம் தேதி ரவுடி சத்தியபாண்டியை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்த வழக்கில் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் சென்னை அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சத்தியபாண்டி கொலை விவகாரத்தில் சஞ்சய் ராஜா என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கோவை மற்றும் கர்நாடக பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சஞ்சய் ராஜா சரணடைந்தார். பின்னர் அவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 
விசாரணையின் போது, சத்தியபாண்டி கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் எடுத்து தருவதாக சஞ்சய் ராஜா வாக்குமூலம் அளித்தார். துப்பாக்கியை எடுக்க கோவை கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் இன்று காலை போலீசார் அழைத்து சென்றபோது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல்  ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை நோக்கி சஞ்சய் ராஜா திடீரென சுட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆய்வாளர் கிருஷ்ணலீலா தப்பினார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காத்துக் கொள்ள சஞ்சய் ராஜாவின் இடது கால் முட்டியின் கீழ் துப்பாக்கியால் சுட்டு, போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், காயமடைந்த சஞ்சய் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.