tamilnadu

img

மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துக.... மத்திய அரசுக்கு எதிராக பவுண்டரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்...

கோவை:
மூலப்பொருள்களின் விலையேற்றத்தைமத்திய அரசு கட்டுப்படுத்த  உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி  கோவையில் 400 பவுண்டரி தொழிற்கூடங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமையன்று  துவக்கின.

கோவை மாவட்டத்தில் 400  சிறு, குறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக,திட்டமிட்டே செயற்கையாக மூலப்பொருட் களின் விலையை உயர்த்தி வருவதாக தொழில்துறையினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன்காரணமாக பவுண்டரி தொழில் முடங்கும் நிலைஏற்பட்டுள்ளது.  ஆகவே, மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசிடம் தொழில்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

இந்நிலையில் மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமையன்று முதல்  கோவை மாவட்ட குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தினர்  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதன்படிகோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகளும் புதன்கிழமையன்று  முழுமையாக வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கின. 

ரூ.30 கோடி உற்பத்தி முடக்கம்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பவுண்டரி அதிபர்கள் கூறுகையில்,  மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தினால் நாள் ஒன்றுக்கு30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும்.  இத்தொழிலைச் சார்ந்துள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதேபோல், இந்த தொழிலைச் சார்ந்து இயங்கி வரும் வெட்கிரைண்டர், என்ஜினீயரிங், மோட்டார் பம்புகள், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும். இந்த வேலை நிறுத்தம் நாங்கள் விருப்பப்பட்டு மேற்கொண்டதல்ல, வேறு வழியின்றியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, மத்திய அரசு உடனடியாக மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கதவடைப்பு
இதற்கிடையே, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காட்மா எனப்படும் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கதவடைப்பு போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் பங்கேற்று இருப்பதாகவும்,  இதனால் 10 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

;