tamilnadu

img

ரயில் கொள்ளையைத் தடுக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு

கோவை, மே 19-ரயில் கொள்ளை அதிகரித்துள்ள நிலையில் இவற்றைத் தடுக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ரயில் வண்டிமற்றும் ரயில் நிலையங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், சேலம், ஈரோடு பகுதிகளில் ரயிலில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சேலம், ஈரோடுபகுதிகளில் நடந்த 12 சம்பவங்களில் 53 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து தேசிய அளவில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வந்தோம். இந்த நிலையில், குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் சனியன்று கைது செய்துள்ளனர். கொள்ளையர்களிடம்நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இந்த கொள்ளையர்கள் ரயில் மெதுவாக செல்லும் இடங்களை கண்டறிந்து, ஜன்னல் அருகே இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள்குடும்பமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். ஆகவே கோடை விடுமுறையையொட்டி, ஜன்னல் ஓரத்தில் உறங்கியபடி பயணம் செய்யும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் ரயில்வே காவல் துறையினர் சந்தேகப்படும் நபர்களை புகைப்படம் எடுத்து 99625 - 00500 இந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்பினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.