சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதே தீர்வு : சிஐடியு
“இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம்கோடி ரூபாய் மானியம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அப்படி தயாராகும் ஒரு வாகனத்தின் விலை சுமார் 2 கோடி ரூபாய். மேலும் பேருந்து பராமரிப்புக்கு டீசல் எஞ்சினைவிட கூடுதல் செலவு பிடிக்கும். இப்படி தயாராகும் பேருந்துகளை தனியார் யாரும் வாங்கமாட்டார்கள் என்பதால் அரசு செலவழித்து நட்டத்தில் சிக்குகிறது”
தமிழகத்தில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. பேருந்து கொள்முதல், பேருந்து பராமரிப்பு, சார்ஜிங் சென்டர்கள், ஓட்டுநர் உட்பட அனைத்தும், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டும்; போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நடத்துநர் மட்டும் அனுப்பப்படுவார் அல்லது நடத்துநர் இல்லாமல் டிக்கெட் மெஷின்கள் கொடுக்கப்படும்; இதில் வசூலாகும் பணத்தை போக்குவரத்துக் கழகங்களிடம் பேருந்தை இயக்கும் தனியார் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்; போக்குவரத்துக் கழகங்கள் 1 கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிர்ணயிக்கப்படும் தொகையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் என ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் 5 லட்சம் முதல் 7 லட்சம் கிலோ மீட்டர் வரை பேருந்தை இயக்க வேண்டும். அப்படியெனில் 5 ஆண்டு முதல் 7 ஆண்டு காலம் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் பேருந்தை இயக்க தனியார் நிறுவனங்களை அரசு அழைத்துள்ளது என்று பொருள். தமிழக அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கவே பயன்படும்.
கிராமப்புற சேவை
1972ஆம் ஆண்டு 3 ஆயிரம் பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 20,000 பேருந்துகளை இயக்குகின்றன. இவற்றில் சுமார் 10,000 பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகிறது. லாபம் இல்லை என்று தெரிந்தும் சேவை நோக்கத்தோடு கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி போக்குவரத்துக் கழகங்களால் அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர 30 லட்சம் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பயணம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பான இயக்கத்திற்கான பல விருதுகளையும் பெற்று வருகின்றன. தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்துக் கழகங்களின் பங்கு அளப்பரியது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.
மின்சாரப் பேருந்து இயக்கம் பலனளிக்காது
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற காரணத்தைக்கூறி மின்சாரப் பேருந்துகளை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மினிபஸ் உட்பட மொத்தம் 34 ஆயிரம் வாகனங்கள் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு இயங்குகின்றன. இதைத் தவிர தமிழகத்தில் பொதுப்பயன்பாட்டிற்கான ஆட்டோ, லாரி, சரக்கு வாகனங்கள், டாக்சிகள், பள்ளி வாகனம், ஆம்புலன்ஸ் உட்பட இவையனைத்தின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் அளவிற்கு இயங்குகின்றன. மேலும் தனியார் சொந்த உபயோக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 3 கோடி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுப்போக்குவரத்தைப் பலப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் மின்சாரப் பேருந்து தயாரிப்பு என்பது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பகுதி மின்சார வாகனங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம்கோடி ரூபாய் மானியம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அப்படி தயாராகும் ஒரு வாகனத்தின் விலை சுமார் 2 கோடி ரூபாய். மேலும் பேருந்து பராமரிப்புக்கு டீசல் எஞ்சினைவிட கூடுதல் செலவு பிடிக்கும். இப்படி தயாராகும் பேருந்துகளை தனியார் யாரும் வாங்கமாட்டார்கள் என்பதால் ஒரு சிறு தொகையை மட்டும் ஊக்கத்தொகையாகக் கொடுத்து போக்குவரத்துக் கழகங்கள் இயக்கச் செலவை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. மத்திய அரசின் இத்திட்டம் போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் நிதிச்சுமையை உருவாக்கவே செய்யும். மின்சாரப் பேருந்துகளில் குறைந்த பயணிகளையே ஏற்ற முடியும். தற்போதைய பயணக்கட்டணத்தில் பேருந்தை இயக்க முடியாது என கருதுகிறோம்.
பயணத்தை தவிர்க்கும் பயணிகள்
தமிழக அரசு ஜனவரி ‘2018 முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய நிலையில் சுமார் 25 லட்சம் பயணிகள் நாளொன்றுக்கு பயணத்தை தவிர்த்துள்ளனர். சென்னையில் ரூ.30 ஆயிரம் கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் பயணிகள் கூடுதலாக செல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிக கட்டணம் என்பதுதான். எனவே மின்சாரப் பேருந்து மூலம் ஏற்படும் இழப்பை போக்குவரத்துக் கழகங்களின் தலையில் சுமத்தி, கழகங்களை சீரழிக்கவே இத்திட்டம் இட்டுச் செல்லும். அத்துடன் போக்குவரத்து வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பதற்கான முன் ஏற்பாடாகவே மின்சாரப் பேருந்தைக் கருத வேண்டியுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு அதிமுக அரசு 50 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவானது. நீதிமன்றம் அரசின் உத்தரவிற்குத் தடைவிதித்தது. இந்நிலையில் தனியார்மய நடவடிக்கையை அதிமுக அரசு கைவிட்டது.
2003க்குப்பின் கடந்த 15 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சிகளின்போது ‘போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கமாட்டோம்’ என மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கத்தோடு இயக்கப்படவில்லை. சேவை நோக்கத்தோடே இயக்கப்படுகின்றன மறைந்த என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். எனவே, தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை எவ்விதத்திலும் சரியற்றது. 525 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்து இயக்குவதாக கூறும் தமிழக அரசு அவை புதிய வழித்தடங்களா; ஏற்கெனவே இருக்கும் வழித்தடங்களா என்பதை தெளிவுபடுத்தவில்லை. பழைய வழித்தடங்கள் எனில் கொள்ளளவு குறைவான மின்சாரப் பேருந்துகளால் எப்படி பயணிகளின் பயணத்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்?
மின்சாரப் பேருந்து இயக்கம் என்பது போக்குவரத்துக் கழகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ உடனடியாக எவ்வித பலனும் தராது. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணச்சேவையை அளித்துவரும் போக்குவரத்துக் கழகங்களை தனியார் பெருமுதலாளிகள் கபளீகரம் செய்யவே வழி வகுக்கும். ஏற்கெனவே ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் சதித்திட்டத்தை மாநில அரசு அமுலாக்கக்கூடாது; போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்கி தமிழக மக்களுக்கு மேலும் பலன் பெறும் அடிப்படையில் இப்பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டுமென சிஐடியு தமிழக அரசை வற்புறுத்தி வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...