tamilnadu

பார் உரிமையாளர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஆய்வாளர் இடமாற்றம்

காஞ்சிபுரம், மே 29- மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது புகார் அளித்து தீக்குளித்த பார் உரிமையாளர் உயிரிழந்ததை அடுத்து ஆய்வாளர்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலியை சேர்ந்தவர் நெல்லையப்பன். காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே  பார்உரிமத்தை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாகக் கூறப்படுகிறது.  கடையின் உரிமையாளர் அவ்வப்போது வாடகையை உயர்த்தியதால் வட்டிக்கு கடன் வாங்கி வாடகை மற்றும் போலீஸாருக்கு மாமூல் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி உயர்த்தப்படும் வாடகை உயர்வு தொடர்பாக மாமல்ல புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் அப்போது  புகாரை வாங்க  மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் உடலில்பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  தீக்குளிப்பிற்கு முன்பு நெல்லையப்பன் அவரது முகநூலில் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில்,  கேளம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளிலுள்ள பார்களில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் மாமூல் கொடுக்க வேண்டும்என மிரட்டும் திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் வீட்டுக்கு காய் கறி முதல் ஏசி வரையில் வாங்கித் தரவேண்டியுள்ளது. மாமல்லபுரம் டிஎஸ்பி. சுப்புராஜூ ஒரு கடைக்கு ரூ. 1.20 லட்சம் வரைக்கும் மாதம் மாமூல் பெறுகிறார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லையப்பன் உயிரிழந்ததை தொடர்ந்து திருப்போரூர் ஆய்வாளர் கண்ணனை காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்ற மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமேனி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.