விபத்தை தடுக்க
கடலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க 98 இடங்களில் 248 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தெரிவித்துள்ளார்.
மானியம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீவனப்பயிர் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொற்று 10,522
புதுச்சேரியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,522ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் சிகிச்சை பலனளிக்காமல் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளது.
பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கர் (43) சரக்கு ரயில் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குண்டர் சட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு நகைகளை பிரிப்பதில் கூட்டாளி தினாவை கொலை செய்த 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை
வாணியம்பாடி காதர்பேட்டை பகுதி முல்லா தெருவில் வசிக்கும் அப்துல் கலீல் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுத்து நிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தாலி கட்டும் நேரத்தில் சிறுமி திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.