தண்ணீருக்கு.....
தவமிருக்கு..... எங்க வெறும்குடம்.
வருணனுக்கே....
தாகம்வந்து.... ரொம்ப சங்கடம்!
(தண்ணீ)
கங்கை நதிகூட அதோ கதியாகி
கானல் நதியாகும் நாட்டினிலே!
அத்தர் பன்னீர் சவ்வாது சந்தன
ஆறோடும் ஆள்வோரின் வீட்டினிலே.
காணாமல் போனது எங்கள் கானகம்.
கார்முகிலை இழந்தது எங்கள் வானகம்.
ஆள்பவர்க் கில்லை கரிசனம்.
ஆனால் உள்ளது தலைக்கனம்.
பாலை வனமாய் பாரதம்.
(தண்ணீ)
தங்கத்தைத் தந்து தண்ணீரை வாங்கினான்
என்னும் செய்தி இனி சாதாரணம்
அங்கத்தைத் தந்தேனும் அரைகுடம் நீர்வாங்க
ஆலாகப் பறக்குது ஏழை ஜனம்!
காடு வளர்ப்பதில் நாட்டம் இல்லையே.
காசு வளர்க்கிறான் நோட்டை எண்ணியே.
தவமிருக் கின்றது நீர்க்குடம்
தருமோ தண்ணீர் தரிசனம்?
பொறுமை இழக்குது பொது ஜனம்.
(தண்ணீ)
மேகங்களே எங்கள் கண்ணீரை யாவது
முகந்து செல்லுங்கள் வான் மீது!
வாய் வெடித்த எங்கள் வயல்களில் இறங்கி
ஊற்றுங்கள் பயிர்களின் வேர் மீது.
கழனியும் கலப்பையும் பிரிவு கொண்டன.
உழவனும் வறுமையும் உறவு கொண்டன.
மண்ணை தொடுமோ மழைத்துளி.?
மங்கலம் இழந்தாள் காவிரி
மழையே எங்களை ஆதரி.
(தண்ணீ)