நடந்தே செல்லுங்கள்
நடப்பதால் ஏதும் ஆகிவிடாது,
என்ன.. சிலர் பாதங்கள் மணல் துகளேறி
பிளக்கலாம், கொஞ்சம் உதிரம் கசியலாம்!
என்ன... மழலைமாறா பிஞ்சு குழந்தைகள்
அடர் சூட்டின் வெம்மை தாளாமல் துடித்து,
கதறியழக்கூடும், எனினும் தாங்கும் சக்தி வளர்வது நல்லதே!
சுருண்டு விழும் சிலர் கண்டு அதிர்ந்து
தேங்கி நிற்காதீர். ஏனெனில் முன்னேற்றம் தடைபடும்,
தேசம் முன்னேற்றம் முக்கியமல்லவா?
சிலர் பசியில் நடைபாதையோரம் மாண்டனரோ? அய்யகோ!
என்ன செய்வது? தியாகங்கள் இன்றி
ஏதையா வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு கனவு!
அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்
வங்கி பணத்தை மொத்தமாய் கட்டிக்கொடுப்பது
இயற்கை வளங்களை சேர்த்துக்கொடுப்பதும்
தேசத்தின் வளர்ச்சிக்கான மூலதனமென அறியாமல்
கதறுகின்ற மனிதர்காள், ஒன்று புரிந்துகொள்வீர்,
அவர்களே தேசம்! நீங்கள் உதிரிகள் அல்லது கணக்கில் வராதவர்கள்!
ஊரடக்கு காலத்தில்கூட தேசபக்தியற்று
மாபெரும் இராஜ்ஜியத்தின் மாண்பைமன்னரை
கேள்விகள் கேட்கும் அற்பபதர்களே!
அமைய இருகும் இராமராஜியத்தில் உங்களுக்கு
காத்திருக்கும் சொர்க்க வாசல் திறக்க வேண்டுமெனில்
மந்தைகளாக இருக்க பழகுங்கள்!
நடப்பதால் ஏதும் ஆகிவிடாது
நடந்தே தேசத்தின் சாலைகளை சுத்தப்படுத்துங்கள்
இன்னும்பல எண்கரசாலை கனவுகள் மிச்சமிருக்கிறது
பின்னர் சொரணையற்ற ஆட்சியாளர்கள் புண்ணியத்தில்
நடக்கவும் உமக்கு அனுமதி கிடைப்பது அரிது
நடந்து நடந்து சாலைகளை அனுபவித்துக்கொள்ளுங்கள்!