tamilnadu

img

பயிர்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது - பாஜக அரசின் அராஜகம்

பயிர் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுக்கு காரணம் என்ற கூறி 29 விவசாயிகளை உத்தரபிரதேச அரசு கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப் அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்கழிவுகளை எரிப்பதே காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் அந்த மாநிலங்களின் செயலாளர்களை விசாரணைக்கு அழைத்த உச்சநீதிமன்றம் பயிர்க்கழிவுகளை எரிப்பதை தவிர்த்து மாற்று வழியை நடைமுறைப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்த வலியுறுத்தியது. 
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிர்க் கழிவுகள் எரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.13.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இதுவரை 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.