இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டல் நிறுவனத்தில், தாடி வைத்திருந்தால் சீக்கியர் ஒருவருக்கு வேலை மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த நபருக்கு அந்நிறுவனம் ரூ.6.67 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியரான ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஓட்டல் நிறுவனத்திற்கு, 7,102 பவுண்டு (இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.6.67 லட்சம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.