states

மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 பேர் பலி

பாஜகவின் வகுப்புவாத அரசியலால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 10 மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ள நிலையில், பல ஆயிரம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுரசந்த்பூர் மாவட்டத்தில் ஷியாம்லால் என்ற மாநில போலீசார் குக்கி இனத்தைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த செல்பி  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், ஷியாம் லாலை திடீரென இடைநீக்கம் செய்தது மணிப்பூர் பாஜக அரசு. 

எங்களுடன் புகைப்படம் எடுத்ததற்காக இடைநீக்கம் செய்கிறீர்கள் என்று கூறி, வியாழனன்று மாலை 400-க்கும் மேற்பட்ட குக்கி பழங்குடியின மக்கள் சுரசந்த்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டு, ஷியாம் லாலை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று  கோரி போராட்டம் நடத்தினர். போராட்டக்களத்தில் நின்ற  பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், போலீசாருக்கும்  - போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். 

போலீசாரின் இந்த தாக்குதலில் குக்கி பழங்குடியின மக்களைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் காயம் அடைந்தனர். போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதை தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.  இக்கலவரத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் காரணம் என்று குக்கி இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.