states

img

எச்சரிக்கை விடுத்தும் மீறி வீம்பாக காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநரால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 3 பேர் பலி  

மகாராஷ்டிராவில் பாலத்தை கார் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்துக்கு இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.மேலும் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட்டல் மாவட்டத்தில் உள்ள முல்ட்டாய் நகரை சேர்ந்த 8 பேர் நாக்பூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். பின்னர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை மீண்டும் முல்ட்டாய் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது நாக்பூரின் சாவ்னேர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அந்த பாலத்தை அவர்கள் கடந்த செல்ல முயன்றபோது, அப்பகுதியிலிருந்த மக்கள் காரை தடுத்து, வெள்ளம் அதிகம் வருவதால் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.  

அவர்கள் சொன்னதை கேட்காமல் சென்ற கார், அந்த தரைப்பாலத்தைக் கடக்க முயன்றுள்ளது. தரைப்பாலத்தில் பாதி தூரம் சென்றநிலையில், வெள்ளம் அதிகமாக இருந்ததால் காரை பின்புறமாக எடுக்க ஓட்டுநர் முயன்றுள்ளார். ஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. காரில் இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையிலும், அங்கிருந்த மக்களால் காப்பாற்ற முடியவில்லை.

இந்த விபத்தில் இருவர் தப்பிய நிலையில் மீதம் இருந்த 6 பேர் வெள்ள நீரில் காரோடு அடித்துச்செல்லப்பட்டனர்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிரேன் உதவியுடன் ஒரு பெண் உட்பட 3 பேரின் உடல்களை காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. மாயமான 3 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

;