states

img

வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவருவீர்களா? சவாலை ஏற்கிறோம் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமார், மீண்டும் வேளாண் சட்டங்களைக் கொண்டுவரவேண்டும் என்பமே மோடி அரசாங்கத்தின் நோக்கம் என்று நாக்பூரில் கூறியிருக்கிறார். இது விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட நாட்டு மக்கள்  அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்கிறோம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசின் சவாலை நாட்டிலுள்ள விவசாயிகளும், தொழிலாளர் வர்க்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், கார்ப்பரேட்டுகளின், கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படுகிற அரசாங்கம் என்பதை அறிவோம். வரவிருக்கும் காலங்களில் நாட்டில் மேலும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடைபெறும், அவை தற்போது மோடியின் தலைமையின் கீழ் கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் அரசாங்கத்தை அழித்தொழித்திடும்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்த பின்னணியில் சம்யுக்த கிசான் மோர்ச்சா, போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. தற்சமயம் சற்றே நிறுத்தி வைத்திருக்கிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அடுத்த கூட்டம் வரும் ஜனவரி 15 அன்று நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தில் எம்.எஸ்.சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி உற்பத்திச் செலவினங்களுடன் 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்து,  குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது,  மின்சார (தனியார்மய திருத்தச்) சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்துவது, உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் தெனியை டிஸ்மிஸ் செய்து, கைது செய்வது உட்பட நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கான வடிவங்கள் விவாதித்து, முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறறில் கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகளும், தொழிலாளர் வர்க்கமும் மிகப்பெரிய அளவிலான ஒற்றுமையுடன் ஒன்றுபட்ட விவசாயிகள் போராட்டத்தில் சாதனை படைத்திருக்கிறார்கள்.  மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை வரும் 2021 பிப்ரவரி 23, 24 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இதனை சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரிக்கிறது. சம்யுக்த கிசான் மோரச்சாவின்  கோரிக்கைகளுடன், தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு லேபர் கோடுகள் என்று கூறி தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியிருப்பதை ரத்து செய்ய வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க மத்தியச் சட்டம் கொண்டுவரவேண்டும்,  தேசிய பணமாற்றுத் திட்டத்தை (National Monetisation Pipeline Project) ரத்து செய்தல், விலைவாசியைக் கட்டுப்படுத்தல், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொது விநியோக முறையைப் பாதுகாத்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.  எனவே, இவ்வாறு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றவும், மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் எண்ணற்றப் போராட்டங்கள் வரவிருக்கின்றன.

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(ந.நி.)