states

img

அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: 2 இளைஞர்கள் தற்கொலை

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக பீகார், ஒடிஷா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வட மாநிலங்களில் தொடங்கிய போராட்டம், தற்போது தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. போராட்டத்தின் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பு ஒன்று பீகார் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தை சேர்ந்த தனஞ்சய் மொஹாந்தி என்ற இளைஞர் நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒன்றிய அரசின் அக்னிபாத்  திட்டத்தால் தனது ராணுவ கனவு நிராசை ஆகிவிட்டது என்று மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் ஹரியானா மாநிலம் ரோஹ்டாக் மாவட்டத்தில் உள்ள
ஜிண்டின் லஜ்வானா கிராமத்தைச் சேர்ந்த சச்சின் என்ற 23 வயது இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  
ஏற்கனவே நேற்று தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடந்த 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.