பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சைக்கான தொகை பறிக்கப்படவில்லை, ஆனால் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகைகள் அளிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன என்று பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது, பி.ஆர். நடராஜன், பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் பணியிலிருக்கும் அலுவலர்களுக்கும் நாட்பட்ட நோய்களுக்குகூட பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறுவதென்பதும், வெளிப்புற சிகிச்சைக்கு பதிலீடாக மாதாந்திர மருத்துவப்படிகள் பெறுவதென்பதும் 2018ஆம் ஆண்டு முதல் பறிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு அறியுமா என்றும், ஆம் எனில், பணம் கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள மருத்துவ பில்களின் (medical bills) எண்ணிக்கை பற்றிய விபரங்கள் மற்றும் எந்த வருடத்திலிருந்து மருத்துவப்படிகள் நிலுவையில் உள்ளன என்ற விபரங்களும் என்ன என்றும், மேலும் 2022 ஜூன் 30ஆம் தேதியின்படி, நிலுவையில் உள்ள மருத்துவ பில்கள் மற்றும் மருத்துவப் படிகளுக்கு அனுமதியளித்து தீர்க்க எந்த அளவு தொகை தேவைப்படுகிறது என்ற விவரங்கள மற்றும் இது குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய தகவல்தொடர்பு இணையமையச்சர் தேவு சிங் சவ்கான் அவர்கள் அளித்த பதில் வருமாறு:
பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் பணியில் இருக்கும் அலுவலர்களுக்கும் மருத்துவ சிகிச்சை பெறுதல் என்பது பறிக்கப்படவில்லை. இருப்பினும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் வகையில் வெளிப்புற சிகிச்சை, உட்புற சிகிச்சை மற்றும் மருத்துவப்படிகள் ஆகியவை உள்ளிட்ட 367/- கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ பில்கள் (medical bills) 2019 ஜனவரி 1 முதல் அனுமதிக்காக நிலுவையில் உள்ளன.
2022 ஜூன் 30ஆம் தேதியின்படி நிலுவையில் உள்ள மருத்துவ பில்களை அனுமதித்து தீர்க்க 367/- கோடி ரூபாய் தேவைப்படுகிறது. பிஎஸ்என்எல்-இல் நிலவக்கூடிய நிதி அழுத்தத்தின் காரணமாக இந்த மருத்துவ பில்கள் அனுமதிக்கப்பட இயலாமல் உள்ளது.
போதுமான நிதிவரத்து அமைந்திடும் போது இந்த நிலுவைகளை தீர்த்திட பிஎஸ்என்எல் முயற்சிகளை எடுக்கிறது. 2022 ஏப்ரல் 6ஆம் தேதியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் அலுவலக குறிப்பாணையின்படி, பிஎஸ்என்எல்-இன் சுகாதார திட்டத்திற்கு மாறுவதற்கு முன்பாக, ஒன்றிய அரசின் சுகாதார திட்டத்தில் (CGHS) பங்களிப்பு செய்திருக்கும், பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள், மீண்டும் ஒன்றிய அரசின் சுகாதார திட்டத்திற்கு மாறிக்கொள்ள விரும்பினால், அவர்களுக்கு CGHS வசதிகளுக்கு உரிமையுள்ளது என்று அரசு கூடுதலாக முடிவு செய்திருக்கிறது.”
இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.