குடியரசுத் தலைவருக்கு 35 திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கள் கிழமை) தொடங்கியது. இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அந்த உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் 35 திருத்தங்களை அளித்துள்ளார். அவற்றின் சாராம்சங்கள் வருமாறு:
“1.பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி நாள்தோறும் உயர்ந்துகொண்டிருக்கின்றன. அதனைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் தோல்வியுற்றுவிட்டது.
2.கடந்த ஆண்டு நடைவெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது 750க்கும் அதிகமான விவசாயிகள் மரணம் அடைந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்க வேலை அளிக்கத் இந்த அரசாங்கம் தவறிவிட்டது.
3. வேளாண் விளைபொருள்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தி உறுதியளித்தபடி அரசாங்கம் சட்டம் கொண்டுவரவில்லை.
4. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதிலும், பொருளாதார மந்தத்தைக் கையாளுவதிலும் அரசாங்கம் தோல்வியுற்றுவிட்டது.
5. நாகாலாந்தில் 5 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
6. பெகாசஸ் உளவு மென்பொருளை அரசாங்கத்தின் எந்தவொரு முகமையும் பயன்படுத்துகிறதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேட்டிருந்த விவரங்களை அரசாங்கம் அளிக்க மறுத்துவிட்டது.
7. அரசாங்கம் முன்பு வாக்குறுதி அளித்தபடி வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையளித்திட அரசாங்கம் தவறிவிட்டது.
8. நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் அநேகமாக அடிமாட்டுவிலைக்குத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் அநேகமாக நாட்டையே அவர்களுக்குத் தாரைவார்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதைப்பற்றி எதுவும் கூறவில்லை.
9. மகளிர் இடஓதுக்கீடு சட்டமுன்வடிவு கொண்டுவருவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
10.பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருவதைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை.
11. முஸ்லீம்கள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற மதச்சிறுபான்மையினர் மீது நாளும் அதிகரித்துவரும் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
12. நாட்டின் பல பகுதிகளிலும் மதவெறி சக்திகளால் மதவெறித் தீ விசிறிவிடுபதுபற்றி எதுவும் கூறப்படவில்லை.
13. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்காகவும், கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்காகவும் நிரந்தர வேலைகளை உருவாக்குவதற்காகவும் பொது முதலீட்டை அதிகரிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
14. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைத்திடும் விதத்தில் “பணம் கொடுத்து செய்தி வெளியிடும் போக்கு” (‘‘paid news’’) அதிகரித்திருப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
15. ரயில்வே ஆளெடுப்பு வாரியத்தில் தொழில்நுட்பமல்லாத வகையினருக்கு ஆள் எடுப்பதில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டு தேர்வில் நடைபெற்ற ஊழல் குறித்தோ, அதனைக் கண்டித்து நடைபெற்ற பந்த் போராட்டம் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
16. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் நாட்டில் வேலை தேடும் அனைவருக்கும் வேலை அளிக்கும் விதத்தில் அந்தச்சட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
17. நாட்டில் சிறார்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
18. மத்தியக் கல்வி நிறுவனங்களிலும், பொறியியல், மருத்துவக் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் அதிகரித்துவரும் ஆழமான நிலைமைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
19. அதிதீவிர வலதுசாரி தீவிரவாத சக்திகளால் மாணவர்கள் மற்றும் இதழாளர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
20. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றாலும், பொருளாதார மந்தத்தாலும் நாட்டில் நிலைமைகள் சீர்கேடடைந்திருப்பது குறித்தோ மற்றும் அரசாங்கம் அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது சாமானிய மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றியிரப்பது குறித்தும், விலைவாசி உயர்வால் அவர்கள் மேலும் மோசமான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.
21. அந்நிய நேரடி முதலீடு நாட்டிற்குள் தாராளமாக வருவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிற வழிகாட்டுதல்கள் குறித்து நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
22. உணவுப் பாதுகாப்புச்சட்டத்தை வலுப்படுத்துவது குறித்தோ, பொது விநியோக முறையில் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைப்பதை உத்தரவாதப்படத்துவது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
23. நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு உணவு கிடைப்பதற்கு வகைசெய்திடும் விதத்தில் வறுமைக்கோடு நிர்ணயம் செய்திடும் முறை மாற்றியமைக்கப்படவில்லை என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
24. பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு அளித்த கடன்கள் வாராக்கடன்களாக மாறியதன் காரணமாக வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் அதிகரித்து நாட்டின் நிதிநிலைமையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
25. நாடு சுதந்திரப்பெற்றபின் இதுநாள்வரையிலும் இருந்துவந்த நாட்டின் சுயேச்சையாக அயல்துறைக் கொள்கை தோல்வி அடைந்திருப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
26. உலகப் பொருளாதார மந்தம் இந்தியத் தொழில்களையும் பாதித்திருப்பது குறித்தோ, நம் நாட்டின் பாரம்பர்யத் தொழில்களில்கூட பல லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்திருப்பது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
27. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொண்டிருப்பதால் பல லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
28. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சீட்டு நிதி நிறுவன ஊழல்கள் மற்றும் பல மாநிலங்களில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டுவரவோ அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவோ எதுவும் நடைபெறவில்லை என்பது கூறப்படவில்லை.
29. உலகப் பொருளாதார மந்தத்தால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலையிழப்புகள், வாழ்வாதார இழப்புகள் முதலானவை குறித்து எதுவும் கூறப்படவில்லை.
30. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவரும் கார்பன் உமிழ்வினைக் கட்டுப்படுத்திட இந்தியா பகிர்ந்துகொள்ளவேண்டிய “தனிநபர் உமிழ்வு” (“per capita emission”) தொடர்பான அடிப்படைக் கொள்கையை மறுவரையறை செய்வது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.
31. நாடு முழுதும் உள்ள விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக ஓர் ஒருங்கிணைந்த மத்தியச் சட்டம் கொண்டுவரப்படாதது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
32. நாட்டில் விவசாயிகளின் நலன் காத்திட உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துக்கொண்டிருப்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.
33. நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கிடவும், வீடற்றவர்களுக்கு வீடு வழங்கிடவும் வகை செய்திடும் விதத்தில் நிலச்சீர்திருத்தங்கள் செய்யப்படாதது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
34. ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்துத் திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தவது குறித்தோ, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிப்பது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
35. மிகவும் பின்தங்கிய கிராமங்களை முன்னேற்றுவதற்காக உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இவ்வாறு நாட்டின் முக்கியமான 35 பிரச்சனைகள் குறித்து எதுவும் கூறப்படாததற்கு வருந்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் உரையில் சேர்த்திட வேண்டும்.”
இவ்வாறு திருத்தங்களை பி.ஆர்.நடராஜன் அளித்துள்ளார்.