states

img

ராணுவத்தில் காண்ட்ராக்ட் வீரர்களா? -இளைஞர்கள் கொந்தளிப்பு

ராணுவத்தில் காண்ட்ராக்ட் வீரர்களா என்று வடமாநில இளைஞர்கள் ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது

இந்தியாவில் ராணுவத்தில் ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் மட்டுமே சேவையாற்ற முடியும். இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து வெளியிட்ட ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.  அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் பணிக்கு சேரலாம். இவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். தக்க வைக்கப்படும் வீரர்கள் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது 4 ஆண்டுகளுக்கு பின்பு எந்த வித சமூக பாதுகாப்பும் இன்றி வீரர்களை நடுத்தெருவில் நிறுத்தி விடும். எங்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள் என்று இளைஞர்கள் கொந்தளித்து போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். 
பீகாரில் ரயில் எரிப்பு
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  பீகாரில் ராணுவம், விமானப்படை, கப்பற்படையில் இணையும் நோக்கில் பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பீகார் புசார் நகரில் உள்ள ரயில் நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து வெளியே அனுப்பினர்.  இதேபோல் உத்தர பிரதேசம் தலைநகர் லக்னோ, முசாபர்நகர், பீகாரின் பரனி பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துளளது. ஆங்காங்கே கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து பீகாரில் ரயிலுக்கு தீவைத்து இளைஞர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.