states

img

இந்துத்துவா அமைப்பின் ‘சோபா’ யாத்திரையால் ஹரியானாவில் மீண்டும் பதற்றம்

சண்டிகர், ஆக.26- இந்துத்துவா அமைப்பின் சோபா யாத்திரை அறிவிப்பு, ஹரியானாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நூஹ் மாவட்டத்தில் மொபைல் மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பாஜகவின் வகுப்புவாத அரசியலால் ஹரியானா மாநிலத்தின் நூஹ், குர்கான், மேவாத்  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் முதல் வாரம்  வன்முறை அரங்கேறியது. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்த நிலையில், நூஹ், மேவாத் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆளும் பாஜக அரசு முஸ்லிம் மக்களின் வீடு, கடைகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப்பால் புல்டோசர் நடவடிக்கை மற்றும் வன்முறை சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்தன. இந்நிலையில், “சர்வ் ஜாதிய இந்து மகா பஞ்சாயத்” என்ற தீவிர இந்துத்துவா அமைப்பு நூஹ் மாவட்டத்தில் திங்களன்று (ஆகஸ்ட் 28) “சோபா யாத்திரை” என்ற பெயரில் வகுப்பவாத ஊர்வலத்தை நடத்துவதாக அறிவித்தது.  இந்த யாத்திரை அறிவிப்பு ஹரியானாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நூஹ் மாவட்ட பகுதியில் மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல், இணையதள தடை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) மதியம் 12.00 மணி தொடங்கி திங்களன்று (ஆகஸ்ட் 28) இரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என கூடுதல் தலைமைச் செயலாளர் டிவிஎஸ்என் பிரசாத் தெரிவித்துள்ளார்.