தெலுங்கானா, செகந்திராபாத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் அக்னிபாத் என்ற ராணுவத்தின் புதிய காண்ட்ராக்ட் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக, பீகார், உத்தரப் பிரதேச, ராஜஸ்தான், அரியானா, தெலுங்கானா மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பீகார் மற்றும் தெலுங்கானாவில் ரயில்களுக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 ரயில் சேவைகள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து தெலுங்கானா ரெயில் நிலையத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.