states

இந்திய சிவில் சமூகம் மீதான தாக்குதல் குறித்து பேச சென்றவர் ஆம்னஸ்டி முன்னாள் தலைவர் பெங்களூருவில் தடுத்து நிறுத்தம்

பெங்களூரு,ஏப்.7- இந்திய சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேசச் சென்ற ஆம்னஸ்டி முன்னாள் தலைவர் பெங்களூரு விமான நிலையத்தில்  தடுத்து நிறுத்தப்பட்டார். ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான ஆகார் படேல், அமெரிக்கா செல்வதற்காக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாயன்று வந்தார். அவர் மீது லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பதாகக் கூறி, குடிவரவு அதிகாரிகள்  அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ஆகார் படேல் தெரிவிக்கையில், “எனது நூல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் என்னை அழைத்திருந்தன.  இந்தியாவில் சிவில் சமூகத்தின் மீது எத்தகைய தாக்குதல் நடைபெற்று வருகிறது என்பது குறித்து அங்கு பேசவிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். கடந்த 2020 ஆம் ஆண்டு குஜராத் பாஜக எம்எல்ஏ தொடுத்த வழக்கில் எனது பாஸ்போர்ட் பறி முதல் செய்யப்பட்டது.  அதனை நீதிமன்றத்தின் வாயிலாக திரும்பப் பெற்று இந்தப் பயணத்துக்கு தயாரானேன். என் மீது சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் சிபிஐயின் கண்காணிப்பில் இருந்தால் என்னை கைது செய்திருக்க லாமே? இந்த நாட்டில் சிவில் சமூகம் எவ்வாறு தாக்கு தலுக்கு உள்ளாகிறது என்பதை இதன் மூலம் அரசு வெளிக் காட்டியுள்ளது. இந்தப் பிரச்சனையை விரைவில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன்” என்று தெரிவித்தார்.   இந்த விவகாரம் தொடர்பாக தில்லி மாநகர  அமர்வு  நீதிமன்றத்தில் ஆகார் படேல்  வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.