“உலகில் எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ; அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்!” என்று சொன்னதோடு, அதையே தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை பின்பற்றிய புரட்சியாளர் “எர்னஸ்டோ சே குவேரா”, பொலிவியா மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த உன்னதப் போராளி. அவர் நினைத்திருந்தால் கியூபாவின் ஜனாதிபதியாகியிருக்க முடியும். ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளில், ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் ஏழைகள் பசி பட்டினியால் வாடுவதைத் தடுக்க எண்ணியே, பொலிவியாவுக்கு சென்றார் சேகுவேரா. 1967 அக்.9 அன்று பொலிவியாவின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இருந்த லா ஹிகுவேரா கிராமத்தில், ‘சே’ பிடிபட்டவுடன் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உளவுத்துறையான சிஐஏ படை அங்கிருந்த பாழடைந்த பள்ளிக் கட்டிடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கியது. கியூபாவின் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த சே குவேராவை சித்ரவதைப்படுத்தி சுட்டுக் கொன்றது. பின்னர் சே மற்றும் அவருடைய தோழர்களின் உடல்கள் ஒன்றாக வல்லே கிராண்டேவில் ரகசியமான இடத்தில் புதைக்கப்பட்டன. பொலிவியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்கள், சேகுவேராவை ‘புனிதர் எர்னஸ்டோ’ என்றுதான் அழைக்கின்றனர். சேகுவேரா புதைக்கப்பட்ட இடத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் தனிக் கவனம் செலுத்திய கியூப அரசு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சேவின் எலும்புக் கூட்டை கண்டுபிடித்தது. கியூபாவிற்கு கொண்டு சென்று அஞ்சலி செலுத்திய அத்தருணம், ‘எர்னஸ்டோ சேகுவேரா’ எனும் புரட்சியாளனை மக்கள் மனதில் மீண்டும் உயிர்த்தெழச் செய்தது.