ஆலப்புழா, அக்.21- “அமெரிக்க மாதிரி, அரபிக் கடலில்” என்ற முழக்கத்தை எழுப்பி, சர்.சி.பி.ராமசாமியின் மக்கள் விரோத - தொழிலாளர் விரோத பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த புன்னப்புரா - வயலார் போராட்டத்தின் 77ஆவது ஆண்டு விழா, வெள்ளியன்று (அக்.20) கோலாகலமாகத் தொடங்கியது. பிறந்த மண்ணில் மனிதனாக வாழும் உரிமைக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வீரமரணம் அடைந்தவர்களின் புரட்சிகர மண்ணில் செங்கொடி ஏற்றப்பட்டது. 27ஆம் தேதி வரை ஒருவார காலம் பழம்பெரும் போராட்டத்தை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த விழா சிபிஎம் - சிபிஐ ஆகியவற்றின் கூட்டான ஒத்துழைப்பில் நடைபெறுகிறது. சிபிஎம்மின் உன்னத தலைவர் சி.எச்.கணாரனின் 51ஆவது நினைவு தினமும் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.
பணியிடங்கள் மற்றும் முக்கிய மையங்களில் கொடியேற்றத்துடன் வாரவிழா துவங்கியது. புன்னப்புரா போராட்ட மண்ணில் விழா குழு தலைவர் இ.கே.ஜெயனும், வலிய சுடுகாடு தியாகிகள் மண்டபத்தில் புரட்சிப் பாடகி பி.கே.மேதினியும், மாராரிகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.நாசரும் கொடியேற்றினர். வயலார் தியாகிகள் மண்டபத்தில் ஏற்றப்படும் செங்கொடி ஊர்வலம் மேனச்சேரி தியாகிகள் மண்டபத்தில் இருந்து தொடங்கியது. சனியன்று காலை 11 மணிக்கு வயலாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.நாசரும், மாலை 5 மணிக்கு மேனசேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.ராஜனும் கொடியேற்றினர். வயலார் கொடியேற்றத்துக்குப் பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் சஜி செரியன், பி.பிரசாத் உள்ளிட்டோர் பேசினர். புன்னப்புரா தியாகிகள் தினமான 23ஆம் தேதி மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தை அந்தபோராட்ட மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தொடங்கி வைக்கிறார். 27ஆம் தேதி வயலார் தினத்தில் டாக்டர். டி.எம்.தாமஸ் ஐசக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.