புவனேஸ்வர், பிப். 28 - ஒடிசாவில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தோ்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலில் கொடுத்த இடங்களைக் கூட இந்தமுறை கொடுக்காமல், பாஜக-வை மக்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். ஒடிசாவில் 5 கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில் 78.6 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. இந்நிலையில், மொத்தமுள்ள 851 மாவட்ட ஊராட்சி இடங்களில் ஆளும் பிஜூ ஜனதாதளம் 734 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக-வுக்கு வெறும் 42 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்களும், சுயேச்சைகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு, நடைபெற்ற ஒடிசா மாநில கிராமப்புற உள்ளாட்சித் தோ்தலில் சுமார் 35 சதவிகித இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இம்முறை 5 சதவிகித இடங்கள் கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. கடந்த முறை பாஜகவுக்கு அதிகமான இடங்கள் கிடைத்த மயூர்பஞ்ச், காலஹண்டி மற்றும் மல்கான்கிரி மாவட்டங்களைக் கூட இம்முறை அக்கட்சியால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. காலஹண்டியில் 2017 தேர்தலில் 33 இடங்களைப் பெற்ற பாஜக இந்தமுறை 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு இடத்தை மட்டுமே பெற்றிருந்த பிஜூ ஜனதாதளம் இந்தமுறை 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.