2 வாரத்திற்கு முன்பு குஜராத் மாநில பாஜக மூத்த தலைவரும், ராஜ்கோட் தொகுதியின் வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா,”ராஜபுத்திர சத்திரிய வம்ச மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர். தங்கள் வம்ச பெண்களைக் கூட இஸ்லாமியர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்” என வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தார். ரூபாலாவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜபுத்திரர்கள், பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக ராஜபுத்திரர்களை அவமதித்துள்ளது எனக் கூறி, குஜராத்தில் அச்சமூக மக்கள் மற்றும் கர்னி சேனா அமைப்பினருடன் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். போராட்டக்களத்தில் பெண்கள் பலர் ‘தீக்குளிக்க’ முயன்ற சம்பவங்களும் அரங்கேறியதால், ராஜபுத்திரர்களின் போராட்டம் வடமாநிலங்கள் முழுவதும் பரவியுள்ளது.
14 மாநிலங்கள்... 22 கோடி மக்கள்...
பலத்த சேதாரத்தை சந்திக்கும் பாஜக
ராஜ்புத் அல்லது ராஜபுத்திரர்கள் என்ற சொல்லுக்கு அரசனின் மகன் என்று பொருள். இது ஒரு மக்கள் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும். குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், ஹரியானா, தில்லி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா என 14 மாநிலங்களில் கிட்டத்தட்ட 22 கோடி அளவில் ராஜபுத்திரர்கள் வசித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முதல் தற்போதைய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் பணிகளில் ராஜபுத்திரர்கள் உள்ளனர்.
பாஜகவின் தீவிர விசுவாசிகள்
ராஜபுத்திரர்கள் பெரும்பாலும் பாஜகவின் விசுவாசிகளாக உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜபுத்திரர்களின் ஆதரவால்தான் பாஜகவினர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பலனடைகிறார்கள். குஜராத் மாநிலத்தில் 17% அளவில் ராஜபுத்திரர்கள் வாழும் சூழலில் அங்கு 95% பேர் பாஜகவினருக்கு வாக்களிக்கின்றனர். பாஜகவிற்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையேயான உறவு அதானி - மோடிக்கும் இருப்பது போன்று மிக நெருக்கமாக உள்ள நிலையில், கடந்த மார்ச் 22 அன்று குஜராத் மாநில பாஜக மூத்த தலைவரும், ராஜ்கோட் தொகுதியின் வேட்பாளருமான ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ஜோதா அக்பர் திரைப்படத்தை மூலப்பொருளாக வைத்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தை பாஜக அதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் மூடி மறைத்த நிலையில், ராஜபுத்திரர்களின் எதிர்ப்பு மூலம் ஏப்ரல் 3 அன்று சமூகவலைத்தளங்கள் மூலம் செய்திகளாக நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடக்கத்தில் பர்ஷோத்தம் ரூபாலா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ராஜ்கோட்டில் போட்டியிடும் ரூபாலாவிற்கு பதில் புதிய வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்றும் ராஜபுத்திர தலைவர்கள் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்தனர். ரூபாலா மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் யாரிடம் மன்னிப்புக் கோரினார் என்ற தகவலை பாஜக தெரிவிக்கவில்லை. மேலும் ரூபாலாவை வேட்பாளர் பட்டியலில் நீக்கவும் பாஜக விரும்பவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜ்புத் அமைப்பான கர்னி சேனாவின் தேசியத் தலைவரான ராஜ் ஷெகாவத் பாஜகவில் இருந்து விலகினார். ராஜ் ஷெகாவத் பாஜகவை விட்டு வெளியேறிய அடுத்த சில மணிநேரங்களில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, அவரை கைது செய்தது. ராஜ் ஷெகாவத்தை கைது செய்த பின்பு பாஜகவிற்கு எதிரான போராட்டம் குஜராத் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்தது. மாநிலம் முழுவதும் பாஜகவிற்கு எதிராக போஸ்டர் யுத்தம், பிரம்மாண்ட பேரணி என ராஜபுத்திரர்களின் போராட்டத்தால் குஜராத் மாநிலமே பதற்றமானது. முக்கியமாக போராட்டக்களத்தில் ராஜபுத்திர பெண்கள் பலர் தீக்குளிக்க முயன்ற சம்பவங்களும் அரங்கேறியதால், இந்த போராட்டம் வடமாநிலங்கள் முழுவதும் பரவியது.
பதற்றத்தில் எழும் கோஷ்டி மோதல்கள்
வகுப்புவாத அரசியல் மூலம் குஜராத் மாநிலத்தை போன்று உத்தரப்பிரதேசத்திலும் பாஜக வலுவாக உள்ள நிலையில், பிரதமர் மோடியின் ஆதிக்கத்தை தகர்க்க, ராஜபுத்திரர் போராட்டங்கள் மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் களமிறங்கியுள்ளதாக பெயரிடப்படாத பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடைபெற்ற ராஜபுத்திரர்களின் மகாபஞ்சாயத்து கூட்டம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் யோகி, மோடியின் தலைமைக்கு குழிபறிக்க நினைக்கிறார். இது எல்லாம் அவருடைய வியூகம்தான்" என்று கூறியுள்ளார். இந்த பேச்சு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோடி உத்தரப்பிரதேசத்தில் இருந்த பொழுதே மகா பஞ்சாயத்து
ஏப்ரல் 7 அன்று பிரதமர் மோடி கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அன்றைய நாளிலேயே உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் ராஜபுத்திரர்கள் மகா பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் 14 மாநிலங்களைச் சேர்ந்த ராஜபுத்திர நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள், தங்கள் சமூக மக்களோடு கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், நாடு முழுவதும் உள்ள ராஜபுத்திர சமூக மக்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் பாஜக வேட்பாளர்களைத் தவிர்த்து மற்ற தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என ராஜபுத்திர தலைவர்கள் தனது சமூக மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்து, இரண்டாவது கட்ட மகா பஞ்சாயத்து கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சர்தானாவில் உள்ள கேரா கிராமத்தில் ஏப்ரல் 16 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பாஜக ஏமாற்றுகிறது என ராஜபுத்திரர்கள் கடும் அதிருப்தி
தங்களது ஆதரவை பெற்றுக்கொண்டு பிரதிநிதித்துவம் எதுவும் அளிக்காமல் பாஜக ஏமாற்றி வருவதாக கடந்த சில வருடங்களாகவே ராஜபுத்திரர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜபுத்திரர்கள் யாரும் இல்லை. கடந்த முறை அமைச்சராக இருந்த முன்னாள் ராணுவ ஜெனரல் வி.கே.சிங்கிற்கு இம்முறை பாஜக சீட் அளிக்க மறுத்துவிட்டது. இது ராஜபுத்திரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் ரூபலா சர்ச்சை பேச்சும் ஆத்திரத்தை தூண்டும் விதமாக இருந்ததால் பாஜகவுடனான உறவை ஒட்டுமொத்தமாக துண்டித்துக் கொண்டனர் ராஜபுத்திரர்கள்.
பிரச்சாரத்திற்கு செல்ல அஞ்சும் பாஜக வேட்பாளர்கள்
வடஇந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், ஹரியானா, தில்லி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், பீகார், ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ராஜபுத்திரர்கள் கணிசமாக வாழ்ந்து வரும் சூழலில், ராஜபுத்திர மக்கள் தங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ‘தீக்குளிக்கும்’ அளவிற்கு ராஜபுத்திர பெண்கள் எச்சரிக்கும் சூழலில், வாக்கு சேகரிக்க சென்றால் கண்டிப்பாக தங்களைக் கொளுத்தி விடுவார்கள் என அஞ்சி பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டோம் என அடம்பிடித்து வருகிறார்கள். வடமாநிலங்களில் ராஜபுத்திரர்களை வைத்து பாஜக அரசியல் பிழைப்பு நடத்தி வந்த சூழலில், ராஜபுத்திரர்கள் வலுவான காரணங்களுடன் தங்களுக்கு எதிராக திரும்பியுள்ளதால் பாஜக 11 மாநிலங்களில் பெரியளவு சேதாரத்தை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“இந்தியா” கூட்டணிக்கு சாதகமாகும்
ராஜபுத்திரர்கள் - பாஜகவினருக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜியாபாத், கவுதம புத் நகர் ஆகிய மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை ராஜபுத்திரர்கள் களமிறக்கியுள்ளனர். அடுத்து நடைபெறும் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் (ஏப்ரல் 16 அன்று) நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான போட்டி வேட்பாளர் நியமனம் குறித்து பரிசீலிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ராஜபுத்திரர்கள் போட்டி வேட்பாளரை களமிறக்கினால் பாஜகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகள் பிரியும். இது "இந்தியா" கூட்டணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்
அகில பாரதிய ராஜ்புத் சமாஜின் சூரத் கன்வீனர் ஜெய்பால்சிங் வாலா கூறுகையில்,“இப்போது இந்த சண்டை ராஜ்கோட் அல்லது குஜராத்தில் மட்டும் இல்லை. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் , ஜார்க்கண்ட், உத்தரகண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் என 14 மாநிலங்களிலும் ராஜ்புத் சமூகத்தினரைக் கூட்டுவோம். பாஜகவிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரவும்" என அவர் கூறினார்.