புதுதில்லி, பிப்.23 - கடந்த சில நாட்களுக்கு முன்பு மொத்த சரக்கு வியாபாரிகளுக்கான டீசல் விலையை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த மிகப்பெரும் விலை உயர்வுக்கு அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நேரத்தை கணக்கிட்டு, சில்லரை விலையை திருத்தாமலேயே ஒன்றிய அரசின் ரகசிய ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. மொத்த சரக்கு வியாபாரிகளுக்கான டீசல் விலை உயர்வு உலகத்தில் உள்ள அனைத்து வணிக கொள்கைகளுக்கும் எதிரானதாகும். சில்லரை விற்பனையைவிட, மொத்த விற்பனை சந்தையில் விற்கப்படும் பொருளின் விலை எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். மொத்த சரக்கு வியாபாரிகளின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வு நெறியற்ற ஒன்று. மேலும், இந்த விலை உயர்வு நாட்டின் மாநில வர்த்தகத்தை குழிதோண்டி புதைத்து விடக்கூடியது. மொத்த சரக்கு வியாபாரிகளின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நியாயமற்ற டீசல் விலை உயர்வு, பொது போக்குவரத்துக்கும், நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களின் கடும் சிரமத்திற்கும் மிகப்பெரும் காரணமாகிவிடும். மக்களுக்கு எதிரான இந்த ஒன்றிய அரசின் இந்த கொள்கையை திரும்பப் பெறக் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த டீசல் விலை உயர்வு எதிராக பிப்ரவரி 28 ஆம் தேதி வரை போராட்டங்களை நடத்துமாறு அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், நாடு முழுவதும் உள்ள அமைப்புகள், சங்கங்களை கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் செயல்படும் அனைத்து வர்த்தக சங்கங்களும் ஒன்றிய அரசின் இந்த முறையற்ற விலை உயர்வுக்கு எதிராக குரல் எழுப்பிட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.