உடல்கள் கெட்டுப்போகும் அபாயம்! உறவினர்கள் அதிர்ச்சி
அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வைக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த குடியிருப்புகளில் பலியானவர்களின் உடல்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அகமதாபாத் காவல் துணை ஆணையர் கனன் தேசாய் கூறுகையில்,”அகமதாபாத் மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வந்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மூலமாக டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று, டிஎன்ஏ சோதனை நடத்தி முடிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். அதன்பிறகே உடல்களை ஒப்படைக்கும் பணி தொடங்கும்” என அவர் கூறியுள்ளார். அடையாளம் காண்பது சிக்கலானது : தடவியல் மருத்துவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்கள் மற்றும் அடையாளம் காணும் பணி குறித்து தடய அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் நரேஷ் குமார் கூறுகையில்,”அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது. உடற்கூறாய்வு அறைக்கு அனைத்து உடல்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. டிஎன்ஏ சோதனைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. தற்போது உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரி திரட்டப்பட்டு வருகிறது. நாட்கள் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து உடல்கள் கெட்டுப்போகும் அபாயமும் உள்ளது. அதனால், எவ்வளவு விரைவாக டிஎன்ஏ சோதனை செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக செய்து முடிக்க தடய அறிவியல் துறையினர் பணியாற்றி வருகிறார்கள்” என அவர் கூறினார். விமான விபத்தில் பலியான 61 பேர் வெளிநாட்டினர் என்பதால், அவர்களின் உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைப் பெற தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.