states

அக். 5 தில்லியில் சங்கமிக்கும் பெண்கள்

நாட்டில் பொது விநியோக திட்டத்திற்கான ஒன்றிய அரசின் ஆதரவு 40 சதவீதத்திற்கும்  அதிகமாக குறைந்துள்ளது. உணவுப் பண வீக்கம் 7 சதவீதமாக உள்ளது. தொற்றுநோய்களின் போது அரசாங்கம் 5 கிலோ இலவச தானியங்களை வழங்கத் தொடங்கியது. ஆனால் பொது விநியோக முறையின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் தானியங்கள் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. 2013 மற்றும் 2021 க்கு இடையில் 4 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  வங்கித் துறையின் தனியார்மயமாக்கல் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸின் கட்டுப்பாடு நீக்கம் ஆகிய வை பெண்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள்  அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், என்சிஆர்பியின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக தினசரி 86 வன்முறை குற்றங்கள்   பதிவாகியுள்ளன.  அதிகரித்து வரும் வன்முறை விகிதம்,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அரசியல் பாதுகாப்பால்தான் அதிகரிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பாஜக -ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளனர்.  பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி போதைப்பொருள் நெட்வொர்க்கில் சிக்கித் தவிக்கின்றனர்.  இத்தகைய சூழலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அக்டோபர் 5 அன்று நாடு தழுவிய முறையில் தில்லியில் மாபெரும் பேரணியை நடத்துகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இப்பேரணியில் பங்கேற்கிறார்கள்.