states

img

காஷ்மீரில் ‘370’ ரத்துக்குப் பிறகும் பயங்கரவாதிகளால் 246 போ் படுகொலை!

புதுதில்லி, ஜூலை 21 - ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னரும், அங்கு பொதுமக்களில் 118 பேரும், பாதுகாப்புப் படைத் தரப்பில் 128 பேரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனா் என்று ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப்பிரிவுகள் ‘370’ மற்றும் ‘35ஏ’ ஆகியவற்றை, ஒன்றிய பாஜக அரசானது, கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்தது. மேலும் ஜம்மு-காஷ்மீா் மாநிலம், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் புகலிடமாக இருப்பதற்கு அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளே காரணம் என்றும், அவற்றை ரத்து செய்வதன் மூலம் இனி காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று மோடி அரசு காரணம் கூறியது. ஆனால், சிறப்பு உரிமை ரத்துக்குப் பிறகு, ஜம்மு - காஷ்மீரில்  பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு அரசுத் துறைகளில் 5 ஆயிரத்து 502 காஷ்மீா் பண்டிட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு அங்கிருந்து பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2018-இல் 417 பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில், 2021-இல் 229-ஆக குறைந்துவிட்டது. 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து இப்போது வரை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினா் 128 பேரும், பொதுமக்களில் 118 பேரும் உயிரிழந்துவிட்டனா். கொல்லப்பட்ட பொதுமக்களில் 5 போ் காஷ்மீா் பண்டிட்கள், 16 போ் இந்து மதத்தின் பிற பிரிவினா் மற்றும் சீக்கியா்கள்” என்று தெரிவித்துள்ளார். “புனித யாத்திரை வந்தவா்களை பயங்கரவாதிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு இருப்பதால் அவா்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. பயங்கரவாதத்தை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற ஒன்றிய அரசின் உறுதியான நிலைப்பாட்டால் காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு வருகிறது” எனவும் நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.