புதுதில்லி,நவ.6- தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 2023 பிப்ரவரி 28 அன்று மாநிலத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அகில இந்திய சிறப்பு மாநாடு அறிவித்துள்ளது. தலித் சோசன் முக்தி மஞ்ச், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அகில இந்திய தலித் உரிமை இயக்கம், பாரதிய கேட் மஸ்தூர் சங்கம், அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய “தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அகில இந்திய சிறப்பு மாநாடு” தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷிணி அலி, கேரள அமைச்சரும் தலித் சோசன் முக்தி மஞ்ச் அமைப்பின் தலைவருமான ராதாகிருஷ்ணன் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
2023 ஜனவரி மாதத்தில் மாநில அளவில் சிறப்பு மாநாடுகள் நடத்துவது என்றும் 2023 பிப்ரவரி 28 அன்று மாநில தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்றும் மாநில அளவிலான மேடைகளை அமைப்பது, தேசிய அளவிலான மேடையை விரிந்த அளவில் அமைப்பது என்று முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதுமிருந்து 700 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் 17 பிரதிநிதிகள் அடங்கிய குழு பங்கேற்றது.