தமிழ்நாடு, கேரளாவைப் போலவே பஞ்சாப்பில் பாஜக கானல் நீரைப் போன்று கண்டும் காணாத இடத்தில்தான் உள்ளது. கடந்த காலங்களில் தனது நெருங்கிய கூட்டாளியான சிரோமணி அகாலிதளத்தின் முதுகில் தொற்றிக்கொண்டு ஒன்றிரண்டு உதிரி சீட்களை கைப்பற்றி வந்த பாஜக, இம்முறை தனித்து கழற்றிவிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் பிரச்சனை காரணமாக சிரோமணி அகாலிதளம் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், மக்களவை தேர்தலில் பாஜக தனித்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் காசு கொடுத்து இழுக்க முயற்சித்தது பாஜக. ஆனால் அது கைகூடவில்லை. பாஜகவை கண்டுகொள்ள வேண்டாம்: விவசாயிகள் எச்சரிக்கை இரண்டு கட்ட விவசாய போராட்டங்களை ஒடுக்க மோடி அரசு நடத்திய கொலைவெறித் தாக்குதல் காரணமாக பஞ்சாப்பில் உள்ள விவசாய சங்கங்கள் பொதுமக்களுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறது. கூட்டத்தின் முடிவில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம், பாஜகவினரின் பிரச்சாரக் கூட்டங்களில் தலைகாட்ட வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி மிக வலுவாக உள்ள சூழலாலும், விவசாயிகளின் தீர்மானம் காரணமாகவும், பஞ்சாப்பில் பாஜக பரிதாபமான நிலையில் உள்ளது. 13 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் பாஜகவிற்கு ஒரு சீட் கிடைப்பது கூட சிரமம் தான்.