states

ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்! நைஜர் ஜனாதிபதி அறிவிப்பு

நியாமே, ஜூலை 28- ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டதாக ராணுவத்தின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ள நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற அந்நாட்டின் ஜனாதிபதி முகமது பசோம் அறிவித்துள்ளார். எக்ஸ்(டுவிட்டரின் புதிய பெயர்) சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவர் சர்வதேச சமூகத்திற்கும், தனது நாட்டு மக்களுக்கும் செய்தி விடுத்திருக்கிறார். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியைத் தான் அளிப்பதாக அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். நைஜர் ஜனாதிபதி மாளிகையின் காவல் பிரிவு ஜனாதிபதி முகமது பசோமைத் தங்கள் பிடியில் எடுத்துக் கொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. நாட்டின் அதிகாரமும் தங்கள் வசம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அந்தப் பிரிவினர், அரசியல் சட்டம் நீக்கப்பட்டதாகவும், நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதி பசோமிடம் தான் பேசியதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹசோமி மசோடோ கூறியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம்தான் சட்டப்பூர்வமான அதிகாரங்களைக் கொண்டது. அது ஜனாதிபதி முகமது பசோமின் தலைமையில் உள்ளதுதான் என்று அவர் தெரிவித்தார்.