states

img

பாஜக கூட்டணிக்கு அதானி தலைமை தாங்குகிறார் என்றும் சொல்ல முடியும்

புதுதில்லி, செப்.14- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதானி தலைமை தாங்குகிறார் என்றும் சொல்ல முடியும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.  இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி புதனன்று சாகர் மாவட்டத்தில் பேசியதாவது,”எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி “கமாண்டியா” (திமிர்பிடித்த) கூட்டணி ஆகும்.கமாண்டியா கூட்டணியினர் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். இந்தியர்களின் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒருங்கிணைத்து வந்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை அழிக்க நினைக்கிறார்கள்” எனக் கூறினார். மோடியின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மீண்டும் அவரின் சிறந்த வேலையைச் செய்ய தொடங்கியிருக்கிறார். ‘இந்தியா’ கூட்டணியை “கமாண்டியா” கூட்டணி என அழைத்து மீண்டும் அவர் துஷ்பிரயோகத்தை தொடங்கியிருக்கிறார். அதுவும் அரசு விழாவை எதிர்க்கட்சிகளை அவமதிக்கப் பயன்படுத்தும் படி பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அவரது நிலைக்கு இறங்கி பேசுவது என்றால், பிரதமர் மோடி “கவுதம் அதானி - தேசிய ஜனநாயக கூட்டணி”க்கு (GA-NDA) தலைமை தாங்குகிறார் என்றும் ஒருவரால் எளிதாக சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.