states

ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவிகிதமாக அதிகரித்தது மொத்த விலைப் பணவீக்கம் வரலாறு காணாத உயர்வு!

புதுதில்லி, மே 20 - நாட்டின் மொத்த விலைப் (Wholesale Price Index - WPI) பணவீக்கம், இதுவரை இல்லாத அளவிற்கு 2022 ஏப்ரலில் 15.08 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2011-12 ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை கணக்கிடும் புதிய நடைமுறை தொடங்கியதற்குப் பின்னர், இதுதான் உச்சபட்ச பணவீக்க அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, பழைய நடைமுறை கணக்கீட்டின்படி 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 16.06 சதவிகிதம் என்ற அளவிற்கு போயிருந்தது. அதன்பிறகு, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான் தற்போது மொத்த விலைப் பணவீக்கம் 15.08 சதவிகிதம் என்ற மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. மொத்த விலைப் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 14.55 சதவிகிதமாக இருந்தது. அதைக்காட்டிலும் ஏப்ரலில் 53 புள்ளிகள் அதிகரித்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் 10.74 சதவிகிதம் என்ற பணவீக்க அளவோடு ஒப்பிட்டால், அதைக்காட்டிலும் சுமார் 5 சதவிகிதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய், அடிப்படை உலோகம், கச்சா பெட்ரோலியம்& இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், உணவு சாரா பொருள்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதே ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத பணவீக்க அதிகரிப்புக்கு காரணம் என்று வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 ஏப்ரலில், காய்கறிகளுக்கான மொத்த விலைப் பணவீக்கம் 23.24 சதவிகிதமும், குறிப்பாக உருளைக் கிழங்கு விலை பணவீக்கம் 19.84 சதவிகிதமும், பழங்கள் விலைப் பணவீக்கம் 10.89 சதவிகிதமும், கோதுமை விலைப் பணவீக்கம் 10.70 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 69.07 சதவிகிதம் என்ற மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவே அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் அடிப்படைக் காரணம் என்று வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறியுள்ளது. கடந்த வாரம் வெளியான தரவுகளின் படி, இந்தியாவின் சில்லரை விலைப் பணவீக்கமும், 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலைப் பணவீக்கத்திற்கான அதிகபட்ச வரம்பு 6 சதவிகிதம் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த நிலையில், தொடர்ந்து நான்காவது மாதமாக ஏப்ரலில் சில்லரை விலைப் பணவீக்கம் 6 சதவிகிதத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.