states

img

குழந்தைகள் மனத்தில் விஷத்தைக் கலக்கும் குஜராத் பாஜக அரசு!

வல்சாத், பிப்.17- பாஜக ஆளும் குஜராத்தில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான திறனறித் தேர்வில், ‘நாதுராம் கோட்சே எனது முன்மாதிரி’ என தலைப்பு கொடுக்கப்பட்டதும், இந்த தலைப்பில் பேசிய மாணவருக்கே முதல் பரிசு வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் கசம் வித்யாலயா பள்ளியில், 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அண்மையில் மாவட்ட அளவிலான திறனறி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 25 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பேச்சுப் போட்டிக்கான தலைப்புகளில் ‘நாதுராம் கோட்சே எனது முன்மாதிரி’ என்பதுவும் ஒரு தலைப்பாக வழங்கப்பட்டு, மாணவர்கள் பேச வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தலைப்பையே தேர்ந்தெடுத்து, மகாத்மா காந்தியை விமர்சித்தும் - கொலைகாரன் கோட்சேவை நாயகனாகச் சித்தரித்தும் மாணவர் ஒருவர் பேசிய நிலையில், அவரையே வெற்றியாளராகவும் அறிவித்துள்ளனர். இது குஜராத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வல்சாத் மாவட்ட இளையோர் மேம்பாட்டு அலுவலர் மிதாபென் கவ்லி என்பவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். “பொறுப்பான அரசு அதிகாரியாக இருந்தும் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது” என அவருக்கான பணி இடை நீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது. “மிதாபென் கவ்லி மட்டுமன்றி, இதில் தொடர்புடைய ஏனைய அலுவலர்களின் பங்கு குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று மாவட்ட ஆட்சியர் சமாளித்துள்ளார். கசம் வித்யாலயா பள்ளி தாளாளர் அர்ச்சனா தேசாயும், “இந்த நிகழ்ச்சி முழுவதும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான இடம் மட்டுமே பள்ளி வளாகத்தில் ஒதுக்கப்பட்டது. இந்தப் போட்டிகளுக்கும் எங்கள் பள்ளிக்கும் வேறெந்த தொடர்பும் கிடையாது” என்று ஒதுங்கிக் கொண்டுள்ளார்.