1965 இல் நடைபெற்ற இந்திய- பாகிஸ்தான் போரின்போது, முஸ்லிம் படைப்பிரிவு பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட மறுத்து விட்டதாக 2022 பிற்பகுதியில் டுவிட்டரில் ஒரு பதிவு வைரலானது. இந்தப் பதிவை பார்த்தவுடனே அது பொய்யான தகவல் என்று சொல்லிவிடலாம். ஏனெனில், முஸ்லிம் படைப்பிரிவு என்ற பெயரில் ஒரு படைப்பிரிவு எப்போதுமே இருந்தது கிடையாது. ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர்கள் 120 பேர் உடனடியாக அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இந்த பொய்யான பதிவு குறித்து புகார் செய்தனர். அதன் பின்னரும் கூட அந்த டுவீட் உடனடியாக நீக்கம் செய்யப்படவில்லை. அது பலமுறை மறுபகிர்வு செய்யப்பட்டது. சமீப ஆண்டுகளில் சமூக வலைத்தளங்கள் அரசியல் மற்றும் தகவல் போருக்கான போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளன. மின்னணு தகவல் தொடர்பு பரவலாக்கத்தால் போலிச் செய்திகள், வெறுப்பு பிரச்சாரங்கள், அரசியல் சமூகக் கதையாடல்கள் அனைவரும் காணக் கிடைக்கின்றன. எனவே, முன்பு எப்போதையும் விட, இது போன்ற செய்திகளால் ராணுவ வீரர்களும் எளிதாக தாக்கத்திற்கு உள்ளாகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில், ஆர்எஸ்எஸ்- பாஜகவின் கூலிப்படைகள் கட்டவிழ்த்து விடுகிற நச்சுத்தன்மை கொண்ட தேசியவாத, பிரிவினைவாத பொய்யான, வலதுசாரிக் கருத்துகள், சமூகத்தை பிளவுபடுத்துகிறது என்பது நமது அன்றாட அனுபவங்களாக உள்ளன. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இத்தகைய வெறுப்புணர்வு, பெரும்பான்மைவாதம், பாரபட்சம் ஆகியவற்றால் ராணுவ வீரர்கள் தூண்டுதலுக்குள்ளாகிறார்கள்.